போதைபொருள் கடத்திய இங்கிலாந்து பெண்ணுக்கு இந்தோனேசியாவில் மரண தண்டனை
பாங்காக்கில் இருந்து கடந்த மே மாதம் பாலி தீவுக்கு விமானம் மூலம் வந்த பெண்ணிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவரிடம் சுமார் 24 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 'கொக்கைன்' என்ற போதைப்பொருள் கைப்பற்றபட்டது.
இந்தோனேஷியா நாட்டின் சட்டப்படி போதைப்பொருள் உபயோகிப்பது கடும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதால் அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்து பாலியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
போதைப்பொருளை கடத்திவந்த லிண்ட்சே சாண்டிஃபோர்ட் (56) என்ற அந்த பெண்ணின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், 'குற்றம் சாட்டப்பட்ட நபரின் குழந்தைகளை கடத்திச்சென்ற போதைப் பொருள் வியாபாரிகள், பிடிபட்ட போதைப்பொருளை பாலிக்கு கொண்டு சென்று குறிப்பிட்ட நபரிடம் ஒப்படைத்தால் தான் குழந்தைகளை விடுவிப்போம் என மிரட்டினார்கள். குழந்தைகளின் உயிரை காப்பாற்றவே இந்த கடத்தலில் என் கட்சிக்காரர் ஈடுபட்டார். எனவே, அவரை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
அரசு தரப்பு வழக்கறிஞர், குற்றவாளிக்கு 15 வருட சிறை தண்டனை வழங்க வேண்டும் என வாதாடினார்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை கேட்ட லிண்ட்சே சாண்டிஃபோர்ட், கதறி அழுதார்.
நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது:-
இந்த வழக்கில் மேலும் 3 கூட்டாளிகளின் மையப்புள்ளியாக குற்றவாளி இருந்துள்ளார். போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்கும் கொள்கையுடைய இந்த நாட்டின் கண்ணியத்தையும், புகழ்பெற்ற சுற்றுலா தலமான பாலி தீவின் கவுரவத்தையும் குற்றவாளி சிதைத்துள்ளார். எனவே, அவருக்கு மரண தண்டனை விதிக்கிறேன்.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்தோனேஷியா சட்டத்தின்படி, மரண தண்டனை விதிக்கப்படவரை தனிமையான ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று சுற்றிலும் போலீசார் நின்றுகொண்டு துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2008, ஜுன் மாதம் போதைப்பொருள் கடத்திய 2 நைஜீரியா நாட்டினர் இவ்வகையில் கடைசியாக சுட்டுக்கொல்லப்பட்டனர். 2005 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் மரண தண்டனை வழங்கப்பட்ட இருவர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
திருமதி சாண்டிஃபோர்டுடன் தாங்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எந்த சந்தர்ப்பத்திலும் மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டையே பிரிட்டன் கொண்டுள்ளது எனவும் வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
திருமதி சாண்டிஃபோர்டுடன் தாங்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எந்த சந்தர்ப்பத்திலும் மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டையே பிரிட்டன் கொண்டுள்ளது எனவும் வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment