Header Ads



அரசுடன் பேச்சு நடாத்திய ஒப்பந்த பிரதியை பகிரங்கப்படுத்த முடியுமா.? மு.கா. க்கு சவால்


அரசுடன் பேச்சு நடத்திய போது பிரதி அமைச்சர் பதவி குறித்து பேசாமல் முஸ்லிம்களின் உரிமைகள் குறித்தே பேசியது என்பது உண்மையாயின் அப்பேச்சுவார்த்தையின் ஒப்பந்த பிரதியை சமூகத்தின் முன் பகிரங்கமாக முன்வைக்க முடியமா என உலமா கட்சி சவால் விடுத்துள்ளது. 

இது பற்றி உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,

கிழக்கு மாகாண தேர்தலில் அரசாங்கத்தை மிகக்கடுமையாக ஏசி முஸ்லிம்களை ஏமாற்றி வாக்குப்பெற்ற ஸ்ரீ. மு. காங்கிரசின் உயர் உறுப்பினர்கள் இன்று தமது மக்களை சந்திக்க முடியாத இக்கட்டான நிலையில் இருப்பதால் அதனை சமாளிப்பதற்காகவே உரிமைகள் பற்றி பேசியதாக பொய் கூறுகின்றனர். கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளிக்கும் போது முஸ்லிம்களின் எந்தவொரு உரிமைகள் பற்றியும் பேரம் பேசியதாக சரித்திரம் இல்லை என்பதை தேர்தல் காலத்தில் நாம் பகிரங்கமாக சொன்னோம். இந்த சவாலை அவர்களால் கடைசி வரை ஏற்கவே முடியவில்லை. மு. கா இது வரை பல சந்தர்ப்பங்களில் அரசை விட்டு வெளியே போவதும் வருவதுமாக இருந்துள்ளது. அப்போதெல்லாம் வெறும் சரணாகதி அரசிலையே செய்துள்ளது. 

    மு. காவின் பேரம் பேசுதல் என்பது இரண்டு விடயங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. ஓன்று தலைவர், தவிசாளர் தவிர வேறு யாருக்கும் பதவி வழங்கக்கூடாது என்பது. மற்றது, தமது எதிராளிகள் சமூகத்துக்கு நன்மை எதையும் செய்ய விடாமல் தடுப்பது. அதாவது வைக்கோல் கந்தில் படுத்திருக்கும் பிராணி போன்ற நிலை. இவை தவிர் வேறு ஏதும் கிடைக்கிறதா என்பது இறைவனுக்கே தெரியும். 

    மு. காவின் இத்தகைய முட்டாள்தனமான பேரம் பேசுதலால் நல்லதொரு திறமைசாலி முஸ்லிம் முதலமைச்சராக வருவதையும், மாகாணத்துக்கான அதிகாரம் கிடைப்பதையும் தடுத்துள்ளது என்ற கிழக்கு மாகாண சபை உறுப்பின்; சுபைரின் கருத்து நூறு வீதம் உண்மையானதாகும். நாம் அரசுக்கு ஆதரவான கட்சியாக இல்லாத  போதும் அரசியலில் எப்போதும் உண்மையையே பேசும் கட்சி  என்பதனால் இதனை சொல்கிறோம். 

இன்று  கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டதைக்கூட தடுக்க முடியாத கை கட்டி வாய் பொத்தி இருக்கும் அடிமை நிலைதான் மு. காவின் பேரம் பேசுதல் சக்தியாகும்.

    இன்னும் இரண்டரை வருடங்களில் தமக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என இவர்கள் கூறுவது மக்கள் எதையும் இலகுவில் மறந்து விடுவர் என்பதை விளங்கிக்கொண்டு ஏமாற்றுவதாகும்.  2004ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது இனி வருங்காலங்களில் மு. கா தலைமை அமைச்சுப்பதவிகளை அலங்கரிக்காது என ரஊப் ஹக்கீம் கூறியது போன்ற கருத்தே இதுவாகும். அத்தோடு இனிவரும் காலங்களில் மு. கா தமது கட்சியின் சின்னம் தவிர்ந்த வேறு கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடாது என இந்த தேர்தலின் போது ஹக்கீம் கூறியுள்ளார். அது கூட அடுத்த பொதுத்தேர்தலில் புஸ்வானமாகிவிடும் என்பது மு காவுக்கு வாக்களிக்கும் மக்களுக்கு புரியா விட்டாலும் எமக்குத்தெரியும்.

    கிழக்கில் அரசுக்கு ஆதரவளிப்பதானது கட்சியை அழிக்க முற்படுவோரிடமிருந்து கட்சியை காப்பாற்றுவதற்கே என இவர்கள் கூறுவதன் மூலம் மக்களை காப்பாற்ற இவர்கள் அரசுடன் இணையவில்லை என்பது தெரிகிறது. இது வெள்ளாடு தன்னை பாதுகாக்க ஓநாயிடம் அவயம் தேடிய கதையாகும். அப்படியாயின் மு. காவின் எதிராளிகள் மிகுந்த பலத்துடன் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் ஏற்றக்கொள்கிறார்களா? தமது மக்கள் மீதும், உறுப்பினர்கள் மீதும் நம்பிக்கை இருந்தால் இவ்வாறு கூற மாட்டார்கள். 

    அமைச்சுப்பதவிகளை பற்றி பேசவில்லை என அறிக்கை வெளியிடும் மு. காவினர் 'இன்னும் சில தினங்களில் மேலும் பலமிக்க அதிகார பலத்துடன் ஹக்கீம் கிழக்கு மக்கள் முன் வருவார்' அறிக்கை விட்டிருப்பது ஹக்கீம் தனக்குரிய பதவி பலத்தை மட்டுமே அரசிடம் பேசியுள்ளார் என்பதைக்காட்டுகிறது. 

    ஆக முஸ்லிம்களின் எந்தவொரு உரிமைகளையும் முஸ்லிம் காங்கிரஸ் அரசிடம் பேசி வெல்ல வில்லை என்பதையும் அரசிடம் பதவிகளுக்காக அடிமையாகி சரணாகதி அடைந்துள்ளது என்பதையும் உலமா கட்சி உறுதியாக கூறிக்கொள்கிறது. 


No comments

Powered by Blogger.