இலங்கைக்கு எதிராக இந்த்திய வாக்களித்ததை ஏற்கமுடியாது - ஜனாதிபதி மஹிந்த காட்டம்
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதற்காக இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது என்பதை ஏற்கமுடியாது மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ‘இந்து‘ நாளிதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“2013 செப்ரெம்பரில் நாம் வடக்கு மாகாணசபைக்கு தேர்தலை நடத்த வேண்டும். அதற்காக நாம் திட்டமிட்ட முறையில் பணியாற்றி வருகிறோம். தேர்தலை நடத்துவதற்கு முன்னர பல விவகாரங்களுக்குத் தீர்வு காண வேண்டும். அதில் முதன்மையானது வாக்காளர் பட்டியல்.
புலிகள் அதிகாரத்தில் இருந்த போது - போரின் போது, தப்பிச் சென்ற மக்கள் இப்போது மீளத் திரும்பி வந்து தமது நிலங்கள், சொத்துகளுக்கு உரிமைகோருகின்றனர். இந்த மக்களுக்கும் பட்டியலில் இடமளிக்கப்பட வேண்டும்.
கடைசியான வாக்காளர் பட்டியல் 30 ஆண்டுகளுக்கு முந்தியது. அதற்கும் தற்போதைய வாக்காளர் பட்டியலுக்கும் தொடர்பு இல்லை. இரண்டாவது விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியமர்வு நடவடிக்கைகள். அனைத்துலக ஆதரவுடனான இந்த நடவடிக்கைகள் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் கூடக் கவனிக்க வேண்டியுள்ளது.
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் 2009 இல் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதற்காக இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது என்பதை ஏற்கமுடியாது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எனது அரசாங்கம் தீவிரமாகப் பணியாற்றியதுடன், 13வது திருத்தத்துக்கு அப்பால் செல்லவும் தயாராக இருந்தேன்.
13வது திருத்தத்துக்கு அப்பால் என்பது செனெட் சபையை உருவாக்குவதாகும். செனெட் சபை உருவாக்கம் உள்ளிட்ட ஒரு தீர்வு நாடாளுமன்றத்தில் இருந்தே வரவேண்டும். அதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு முக்கியமானது.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
Post a Comment