Header Ads



மாகாண சபைகளுக்கான வேட்புமனு நாளை ஆரம்பம் - (மாவட்ட விபரங்கள் இணைப்பு)


நடைபெறவுள்ள மூன்று மாகாணசபைகளுக்குமான தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை ஆரம்பமாகவுள்ளது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் நாளை முதல் ஆரம்பமாகி எதிர்வரும் 19ம் திகதி வரை நடைபெறவுள்ளதாக ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.

அதற்காக மூன்று மாகாணங்களிலுமுள்ள ஏழு மாவட்டங்களில் உரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தந்த மாவட்டச் செயலகங்களில் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் எனவும் அது தெரிவித்துள்ளது.
மூன்று மாகாணங்களுக்குமான தேர்தல்களை அமைதியான முறையில் நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதனை உறுதி செய்யும் வகையில் வேட்பு மனுத் தாக்கலின் பின் சர்வ கட்சி செயற்பாட்டுக் குழுவொன்றை அமைத்து செயற்படுத்தவும்  உத்தேசித்துள்ளதாக தேர்தல் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெறவுள்ள திருகோணமலை மாவட்டத்தில் 2 இலட்சத்து 45 ஆயிரத்து 363 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 566 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு 18 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 இலட்சத்து 47 ஆயிரத்து 099 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 787 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 285 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 10 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் 7 இலட்சத்து 69 ஆயிரத்து 813 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 623 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு 24 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 6 இலட்சத்து 31 ஆயிரத்து 981 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 464 வாக்களிப்பு நிலையுங்கள் அமைக்கப்பட்டு 14 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

வட மத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மற்றும் பொலநறுவை மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்தில் 6 இலட்சத்து 06 ஆயிரத்து 507 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 608 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

பொலநறுவை மாவட்டத்தில் 2 இலட்சத்து 94 ஆயிரத்து 265 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 287 வாக்காளிப்பு நிலையங்களில் 10 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
ஒவ்வொரு மாகாணங்களிலும் வெற்றி பெறும் கட்சிகளுக்கு தலா இரண்டு போனஸ் ஆசனங்கள் வழங்கப்படவுள்ளன

No comments

Powered by Blogger.