பொருட்களின் விலை அதிகரிப்புக்கு பிரீத்தி ஜிந்தா, விவேக் ஒப்ரேயின் வருகையும் காரணம்
இலங்கையில் சீனி, பருப்பு போன்ற அத்தியவாசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பில் இந்திய சினிமா நட்சத்திரங்கள் பிரீத்தி ஜிந்தா, விவேக் ஒபரோய் மற்றும் காரோட்டப் போட்டிகள் ஆகியவற்றுக்கான வீண் விரய செலவுகளும் உள்ளடங்கியிருப்பதாக தெரிவித்த ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.அநுரகுமார திஸாநாயக்க கிராமப்புறங்களில் பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு விட்டது என்பது அமுனுகம விதியாகவே இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அநுரகுமார திசாநாயக்க இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்,
அமைச்சர் சரத் அமுனுகம பேசுவதை பார்த்தால் அவர் இந்த நாட்டை பற்றியா பேசுகிறார் என்று சந்தேகமாக இருக்கிறது. கிராம புறங்களில் பெண்கள் ஜீன்ஸ் அணிவதை பொருளாதார வளர்ச்சியாக குறிப்பிடுகிறார்கள. கிராம புறங்களில் பெண்கள் ஜீன்ஸ் அணிவது நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்றால் அது அமுனுகம விதியாக தான் இருக்க முடியும்.
இதேநேரம் ரகர் போட்டிகளும் காரோட்டபந்தயங்களும் மக்களின் பணத்தை வீண் விரயமாக்கியே நடத்தப்படுகின்றன. மக்களின் பணத்தில் ரகர் வசந்தம் நடத்தி அதற்காக பிரீத்தி ஜிந்தா, விவேக் ஒபரோய் போன்றோரை கூட்டி வந்தனர் சில அமைச்சர்கள் பிரீத்தி ஜிந்தாவை சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர், இறுதியில் போட்டியை பார்க்க வந்ததற்காக ஒன்றரை கோடி ரூபாவை கொடுத்து அனப்பினர்.
இதேபோல தான், கொழும்பு வீதிகளில் மண் மூடைகளை போட்டு மின்சாரத்தை விரயமாக்கி கரோட்ட போட்டிகளையும் ஏற்கனவே நடத்தினர். இது எல்லாம் யாருக்காக, கிராமபுற பிள்ளைகளுக்காக இவை நடத்தப்படவில்லை. குறித்தவொரு உயர்டமட் பிள்ளைகளுக்காகவே இவை நடத்தப்படுகின்றன.
மக்களின் பணமே இதற்கெல்லாம் வீண் விரயம் செய்யப்படுகிறது. சீனி, பருப்பு போன்ற பொருட்களின் விலை அதிகரிப்பினுள் இந்த பிரீத்தி ஜிந்தா, விவேக் ஒபரோய் காரோட்டப் போட்டிகள் போன்றவற்றுக்கான வீண் வியம செலவுகளும் இருக்கின்றன என்றார்.

Post a Comment