இலங்கையில் புதிய வன்முறைகள் வெடிக்கும் அபாயம் - அமெரிக்கா சொல்கிறது
போர்க்குற்றசாட்டுகளுக்குப் பதிலளிக்கப்படாமல் போனால், இலங்கையில் மீண்டும் மோதல்கள் உருவாகும் ஆபத்து இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக், வொசிங்டனில் ஏபி செய்தியாளருக்கு அளித்த செவ்வியிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
“பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கம் என்பன இலங்கையின் நலன்களுக்கு அவசியமானவை. அதன்மூலம் அவர்கள் உண்மையான அமைதியையும் பாதுகாப்பையும் அடைய முடியும். இல்லையேல், சொந்த சமூகத்தினரின் கோபத்தினால், புதிய வன்முறைகள் அதிகரிக்கலாம்.
உலகில் நிகழ்ந்த பல உள்நாட்டு மோதல்கள் இந்த அனுபவத்தை தந்துள்ளன. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதலுக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் மீளத்தோற்றம் பெற்ற கிளர்ச்சிகளை தொடர்ச்சியாக அனுபவிக்கிறார்கள். இலங்கையில் இதேபோன்ற நிலையை நாம் பார்க்கக் கூடும். போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசாங்கம் பல வீதிகளையும் அடிப்படைக் கட்டுமான வசதிகளையும் வடக்கில் கட்டியெழுப்பியுள்ளது.
ஆனால் வடக்கில் உள்ள பல தமிழர்கள் தாம் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாகவே உணர்கிறார்கள். வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்தி அதிகாரங்களை பகிர்ந்து, தமிழர்கள் தமது பகுதியில் மேலும் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வதற்கு வழிசெய்ய வேண்டும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment