Header Ads



எரிவாயு சிலிண்டர்களின் கலவையில் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களே, அவை தற்போது வெடித்துச் சிதறக் காரணம் - வெளியானது அதிர்ச்சித் தகவல்


எரிவாயு சிலிண்டர்கள் கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களே அவை தற்போது வெடித்துச் சிதறக் காரணம் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துசான் குணவர்த்தனவை மேற்கோள் காட்டி டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து டெய்லி மிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இலங்கையின் பல இடங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியமைக்கு அவற்றின் கலவையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம் உறுதிப்படுத் தியுள்ளதைத் தொடர்ந்து எரிவாயுக் கசிவு குறித்து பொதுமக்கள் முறைப்பாடு செய்த போதிலும் எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமைக்காக இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஜூன் 18 ஆம் திகதி லிட்ரோ எரிவாயு ஒழுங்குபடுத்துனருக்கு அப்பாற்பட்டதா? எனவும் ஓகஸ்ட் 25 ஆம் திகதி இலங்கையின் சமையல் எரிவாயு சந்தையில் குமுறல்கள் என்ற தலைப்பிலும் டெய்லி மிரர் பிரத்தியேக செய்திகளை வெளியிட்டிருந்தது.

ஏப்ரல் மாதத்திலிருந்தே தெரியவராத காரணங்களிற்காக சிலிண்டரின் எரிவாயுக் கலவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. லிட்ரோ நிறுவனமும் லாஃப் நிறுவனமும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அனுமதியின்றி இந்த மாற்றங்களை மேற்கொண் டுள்ளன.

கடந்த ஏப்ரலில் இருந்து லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சிலிண்டரின் வாயுக் கலவையை பியூட்டன் 80 : புரொபேன் 20 என்ற நிலையிலிருந்து முறையே பியூட்டன் புரொபேன் 50க்கு 50 என மாற்றியுள்ளன.

வால்வுகளில் கசிவுகள் ஏற்படுகின்றன என வெளியான முறைப்பாடுகளுக்கு இதுவே காரணம்.

எரிவாயு கலவையில் ஏற்பட்ட மாற்றங்களே அனைத்து வெடிப்புச் சம்பவங்களுக்கும் காரணம் என தான் உறுதியாக நம்புவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின்முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துசான் குணவர்த்தன டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சித்திக சேனரட்ண ஆகியோருடன் நானும் ஏனைய அதிகாரி களும் இலங்கை நுகர்வோர் அதிகார சபையில் இந்த வருடம் ஜூன் மாதத்தில் நடத்திய சந்திப்பின் பின்னர் நான் இந்த ஆபத்துக்கள் குறித்து எதிர்வு கூறினேன் என குறிப்பிட்ட அவர் இலங்கை ஒரு வெப்பமண்டல நாடு என்பதால் எல்பி வாயுவில் குறைந்தளவு புரொபேனும் அதிகளவு பியூட்டனும் காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஏன் எல்பி வாயுவின் கலவையில் மாற்றங்களை மேற்கொண்டீர்கள் என நாங்கள் கேட்டவேளை தரநிர்ணய நிறுவனத்தின் தலைவரிடம் எந்தப் பதிலும் இருக்கவில்லை என குறிப்பிட்ட குணவர்த்தன, நான் ஐம்பதுக்கு ஐம்பது என்ற கலவையைக் கொண்டிருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்து அவருக்கு தெளிவுபடுத்தினேன் எனவும் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு சிலிண்டரில் அதிகளவு புரோபேன் காணப்படுவது ஆபத்தானது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என்பதை நான் அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன் எனவும் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறலாம் என்பதையும் நான் அவர்களுக்கு தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டார்.

எனினும் சித்திக சேனரட்ண எல்பி வாயுவின் கலவையில் மாற்றங்களைச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் துசான் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிற்கும் இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் கீழ் உடனடி நடவடிக்கையை எடுக்குமாறும் ,இலாபம் உழைப்பதற்காக எரிவாயு நிறுவனங்கள் சிலிண்டரின் கலவையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டாம். அதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் வேண்டுகோள் விடுக்கும் கடிதத்தை ஜூன் பத்தாம் திகதி அனுப்பினேன் எனவும் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதனால் மிகவும் பாரதூரமான ஆபத்து ஏற்படக் கூடும்,என்பதை நான் அறிந்திருந்தேன்,அது உண்மை என்பது தற்போது நிருபணமாகியுள்ளது. அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் எனது கோரிக்கை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். Thinakkural

No comments

Powered by Blogger.