Header Ads



கிண்ணியாவின் ஆறாத வடு - கண்ணீரை வரவழைக்கும் சாட்சியங்கள், நிம்மதியாக மக்கள் படகில் பயணம் செய்வது எப்போது...?


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

திடீர் சோகத்தில் ஆழ்த்திய படகு பாதை விபத்து நாளான 23.11.2021 ந் திகதியை மறக்க முடியாது. திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் உள்ள கிண்ணியா நகர சபையையும் கிண்ணியா பிரதேச சபையையும் இணைக்கும் பாலமே குறிஞ்சாக்கேணி பாலம் இதில் படகு பாதை உடைந்து  கவிழ்ந்ததில் ஐந்து  மாணவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தார்கள் 27 நபர்கள் கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். குறித்த பாலம் புனரமைப்புக்காக மூடப்பட்ட இந்த பாலம் இயந்திர படகு பாதை மூலமான போக்குவரத்து இடம் பெற்ற நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது சம்பவ நாளன்று காலை வேலையில் பிரதேச சபை பகுதியில் இருந்து நகர சபை பகுதியை நோக்கி பயணித்த வேலையில் கரையை அடைய சுமார் 50 மீற்றர் தூரத்தில் இப் பகுதி கவிழ்ந்ததில் இளம் பிஞ்சுகளின் உயிரையும் குடி கொண்டது இதனால் கிண்ணியா சமூகம் மட்டுமல்ல முழு நாடுமே சோகத்தில் அன்றைய தினம் மூழ்கியது இதனால் ஆத்திரம் கொண்ட இளைஞர்கள் வீதியில் தடைகளை ஏற்படுத்தி டயர்களை எறித்தும் தங்களை தாங்களே ஆற்றுப்படுத்திக் கொண்டனர். "இந்த படகு விபத்துக்கு காரணம் வேகமான ஓட்டமே வெட்டும் போதும் வேகமாக வெட்டியதனால் இந்த நிகழ்வு இடம் பெற்றது நான் சுழியோடியே வெளியே வந்தேன் அத்துடன் ஐந்து பிள்ளைகளையும் காப்பாற்றியுள்ளேன் " என படகு பயணத்தில் உயிர் தப்பி கிண்ணியா தளவைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பும் போது ஆசிரியரான எம்.சாமித் தனது கருத்தை மேற்கண்டவாறு ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்தார்.

இந்த இயந்திர படகானது சுமார் மூன்று பிளாஸ்டிக் வல்லங்களை கொண்டு பலகையுடன் இணைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டாலும் கூட இவ்வாறான கோர சம்பவத்துக்கு அது வித்திட்டது கிண்ணியா பெறியாற்றுமுனை பகுதியை சேர்ந்த தனியார் ஒருவருக்கு இப் படகு செலுத்துவதற்கான அனுமதிக் கடிதம் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் அவர்களினால் கையொப்பமிடப்பட்ட கடிதம் மூலமாக 2021.10.28 வழங்கப்பட்டுள்ளது.இக் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது " மேற்படி விடயம் சம்மந்தமாக குறிஞ்சாக்கேணி இறங்கு துறை பகுதியில் பால நிர்மாண காலப் பகுதியில் பொது மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் வகையில் மோட்டார் படகு சேவையை நடாத்துவதற்கு தாங்களுக்கு பின்வரும் நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்கப்படுகிறது. குறித்த சேவையின் போது பாதுகாப்பு நியமங்கள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும், குழந்தைகள் மற்றும் பாடசாலை சிறார்களுக்கு மேற்படி சேவையானது இலவசமாக வழங்கப்பட வேண்டும், படகினது உறுதிப்பாடு குறித்து அவ்வப்போது சோதிப்பது அவசியமானது மேற்படி நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் தங்களுக்கு வழங்கப்படும் அனுமதி இரத்துச் செய்யப்படும் " இது தொடர்பில் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தியிடம் இது தொடர்பில் வினவிய போது  தவிசாளரால் வழங்கப்பட்ட இந்த அனுமதி கடிதம் சபைக்கோ உறுப்பினர்களுக்கோ தெரியாமல்  வழங்கப்பட்டுள்ளது. இது பல வாதப் பிரதிவாதங்களை உண்டாக்கியிருக்கிறது.

நகரசபைக்கு முறையாக அனுமதி வழங்கப்பட முடியுமாயிருந்தால்

அதன் தரம் உறுதிச்சான்று, தொழில்நுட்பம் சம்பந்தமான சான்றிதழ்,

Marine, Nara சான்றிதழ்,

பயணிகளின் உச்ச எண்ணிக்கை,

ஓட்டுனர் அனுமதிப்பத்திரம்,

பாதுகாப்பு அங்கிகள் ஏற்பாடு,

உதவி ஆட்கள் நியமனம்,

பயணிகள் காப்புறுதி ஏற்பாடு

என பல்வேறு விடயங்கள் பரீட்சிக்கப்பட்டு இருக்கும்

முறைகேடாக தவிசாளரால் வழங்கப்பட்ட சான்றிதழுக்கு தவிசாளரே வகை கூற வேண்டும். விசாரணை ஆரம்பிக்கும் போது தாமாக தகவல்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.


இதற்கு முன்னரும் இவ்வாறு பல முறைகேடுகள் நடந்து அதற்கு நான் சட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கிறேன் என்றார். இந்த பாலம் சுமார் 100 மீற்றர் தூரம் கொண்டது 1977 களில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த இந்த குறிஞ்சாக்கேணி பாலம் தொடர்பில் பல வாக்குறுதிகள் அரசியல்வாதிகளால் கொடுக்கப்பட்டது ஆனாலும் வெறும் பேச்சுடன் முடிவடைந்தது 2015 ல் வெள்ள அனர்த்தம் காலமாக பகுதி பகுதியாக இரண்டாக பிளந்து  உடைந்து சேதமாகியது இதனால் பயணிக்க முடியாது தற்காலிக இரும்பு பாலம் உடைந்த பகுதிக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக போடப்பட்டது இதன் ஊடாக பால புனரமைப்புக்கு முன்னர் நாளாந்தம் 8000 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணித்து வந்தார்கள். கடந்த  ஜனாதிபதி தேர்தலின் போது முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிண்ணியா நகர சபை மைதானத்தில் 2014.டிசம்பர் மாதமளவில் இடம் பெற்ற பொதுக்கூட்டத்தின் போது இப் பாலத்தை முழுமையாக புனரமைப்பு செய்து தருவதாக வாக்குறுதியளித்தார். ஆனால் அது நிறைவேறவில்லை இருந்த போதிலும் பல போராட்டங்களை மக்கள் பால புனரமைப்புக்காக வேண்டி நடாத்தினர் கிண்ணியா சமூகம் ஏமாற்றப்பட்ட நிலையில் 2019 ல் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவினால் அடிக்கல் நடப்பட்டது அதுவும் தோல்வி கண்டது சுமார் 750 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த பாலம் தற்போதைய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் நிமால் லான்சா  அவர்களினால் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க 2021.04.10 ம் திகதி அடிக்கல் நடப்பட்டது. வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இடை நடுவில் கைவிடப்பட்டு மீண்டும் ஆரம்பமானது .

புனர்நிர்மாணம் காரணமாக இழுவை படகு சில மாத காலங்கள்  இயங்கின அதன் பின் விபத்துக்குள்ளான இயந்திர படகு ஆரம்பித்து சுமார் மூன்று வாரங்கள் கடந்த நிலையில் இக்கோர சம்பவம் நிகழ்ந்து உயிர்களை காவு கொண்டது இந்த படகு  விபத்து  தொடர்பில் கிண்ணியா நகர சபை தவிசாளர் படகு உரிமையாளர்,படகு ஓட்டுனர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கிண்ணியா தளவைத்தியசாலையில் இவ் விபத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பியவர்கள் சிலர் சிகிச்சை பெற்று வரும் நிலையின் போது இவ்வாறு கருத்து தெரிவித்தனர். "நீரில் மூழ்கும் போது பிள்ளைகளை கூட கையால் பிடிக்க முடியவில்லை எப்படி பிடிப்பது ஏதோ உயிர் தப்பி பிள்ளையுடன் கரை சேர்ந்தேன் " என ஒரு தாய் கண்ணீர் வடித்தார்.

மற்றுமொரு தாய் தனது பிள்ளையுடன் உயிர் தப்பியதை விவரித்தார் "காலை 7.10 மணியளவில் படகில் ஏறி நடுவுக்கு வந்தோம் நிறைய பயணிகளை ஏற்றியிருந்தனர் இதன் போது ஒரு பகுதி குடை சாய்ந்து நீரில் மூழ்கடிக்கப்பட்டது எனக்கு நீந்த தெரிந்ததால் ஒரு கையால் பிள்ளையை இருகப் பிடித்து காலால் நீந்தி கரை சேர்ந்தேன் ஆழமான பகுதியில் இருந்தே நீந்தி வந்தேன் அதன் பின் ஆட்டோவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டேன் " என தனது உயிர் தப்பிய வார்த்தைகளை கண்ணீருடன் ஒரு தாய் பகிர்ந்து கொண்டார்.

குறித்த பாலம் ஊடாக பயணிப்பது சிறிய தூரம் என நினைத்த போக்குவரத்தாளர்கள் வீதி ஊடான நகர பிரதேச சபை தூரமாக சுமார் 3 கிலோ மீற்றர் தரை வழி போக்குவரத்தைக் கொண்டது .பல கனவுகளுடன் பயணித்த சிறார்கள் கல்விக்காய் காத்திருந்து எதிர்காலத்தை நினைத்து பார்க்கையில் மனம் கனக்கிறது ஆறாத் துயரால் பெற்றார்கள் ஆழ்ந்த மனவேதனையுடன் இருக்கிறார்கள் .இந்த பாலம் இருந்திருந்தால் இவ்வாறான படகு விபத்து இடம் பெற்றிருக்காது .ஆனால் இலங்கை கடற்படை மூலமாக சுமார் 25 நபர்கள் பாதுகாப்பு அங்கியுடன் பயணிக்க கூடிய இயந்திர படகு சேவை தற்போது (26.11.2021) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இயந்திரம் மூலமான படகில் பாதுகாப்பு அங்கிகள் இல்லாத நிலையில் பல குறைபாடுகள் கவனிப்பாரற்ற நிலையில் இது இடம் பெற்றுள்ளது இதற்கான அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படாத நிலை இங்கு பெரும் குற்றமாகவே பார்க்கப்படுகிறது. கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிகார் இது தொடர்பில் உள்ளூர் ஊடகமொன்றுக்கு (24) கருத்து தெரிவிக்கையில் நகர சபை அனுமதி கொடுத்தது தெரியாது ஆனால் தான் முன்னர் இழுவை படகுக்கான ஒத்துழைப்புக்களை வழங்கினேனோ தவிர அதற்கான எழுத்து மூலமான ஆவணங்கள் கொடுக்கப்படவில்லை சுமார் 75 மீற்றர் தூரமான ஆழம் குறைந்த சேவையை நடாத்த  தனியாருக்காக ஒத்துழைத்தேன் என்றார். 

ஒட்டு மொத்தமாக இந்த சம்பவத்தின் பிரகாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த இளம் சிறுவர்களான இரு சோதரங்கள் மற்றும் மற்றுமொரு குடும்பத்தில் இருந்து தாயும் மகளும் என நான்கு இளம் பிஞ்சுகளை இவ் விபத்துச் சம்பவத்தில் உயிரை காவு கொண்டது. இவ் இயந்திர படகு மூலமாக நாளாந்தம் 1000 க்கும் மேற்பட்டோர்கள் போக்குவரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவர்களுக்காகவும் உயிர்தப்பிய உறவுகளுக்காகவும் ஆழ்ந்த அனுதாபங்களை கிண்ணியாவில் துக்கதினமாக 25.11.2021 அனுஷ்டிக்கப்பட்டது ஆனாலும் எம்மவர்களின் உள்ளங்களில் அந்த நாட்களை ஒரு போதும் மறக்க முடியாது .இந்த விடயம் தொடர்பில் பால அபிவிருத்தி தொடர்பில் ஆரம்பத்தில் கரிசனை காட்டாது மக்களின் கருத்துக்களை செவிசாய்க்காது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவங்கள் இனியும் நடக்ககக் கூடாது இவ்வாறான சம்பவங்களில் விபத்து இடம் பெற்ற நாளன்று கிண்ணியாவே சோகத்தில் குடி கொண்டது இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் வீட்டினை சேதப்படுத்தினார்கள் நீதி கேட்டு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டார்கள் . இன்னும் ஆறாத வடுக்களாக தங்களுக்கான நியாயமான விரைவான பால அபிவிருத்தியை உரிய காலத்தில் செய்திருந்தால்இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்காது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

No comments

Powered by Blogger.