Header Ads



நாட்டை திறந்த பின்னர் இப்படியெல்லாம் நடைபெற உள்ளது...?


அடுத்த மாதம் 1 ஆம் திகதி வழமை போல் நாட்டைத் திறக்க தீர்மானித்துள்ள அரசாங்கம், அனைத்து அரச ஊழியர்களையும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப வேலைக்கு அழைக்கவும் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, தனியார் துறை ஊழியர்களையும் அடுத்த மாதம் 1 ம் திகதி முதல் வழமை போல வேலைக்கு அழைக்க அனுமதிப்பதற்கும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நிதி அமைச்சில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பொதுச் சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அமைச்சின் செயலாளர்கள், பொலிஸ்மா அதிபர் உட்பட அரச அதிகாரிகள், பஸ் சங்கங்கள், முச்சக்கர வண்டிகள் சங்கங்கள் உட்பட சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்.

அதன்படி, அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் காலை 9 மணிக்கு அரச ஊழியர்களை அழைக்கவும், காலை 10 மணிக்கு தனியார் துறை ஊழியர்களை அழைக்க அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களைப் போலவே ரயில் மற்றும் பஸ் சேவைகளையும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களை அழைப்பது தொடர்பான விசேட சுற்றறிக்கை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

இதேவேளை, நாட்டை வழமைபோல திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு விரைவில் ஒரு புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.