ஏப்ரலுக்கு பிறகு பெரியமுல்லையிலும், கம்மல்துறையிலும் கொரோனாக்கு 24 பேர் வபாத் - சமூகத்தில் ஏராளமான தொற்றாளர்கள்
- Ismathul Rahuman -
நீர்கொழும்பு சுகாதார வைத்திய பிரிவில் கொரோனா புது வருட அலையின் பின் இதுவரை 83 பேர் மரணம் அடைந்துள்ளனர் என முகாமைத்து பொது சுகாதார பரிசோதகர் வசன்த சோலங்காரச்சி தெரிவித்தார். இதற்கு மேலதிகமாக 26 ஜனாஸாக்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையிலிருந்து
நல்லடக்கத்திற்காக ஓட்டமாவடிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் இருந்து ஓட்டமாவடிக்கு அனுப்பப்படும் சடலங்களின் விபரம் நீர்கொழும்பு சுகாதார வைத்திய பிரிவினருக்கு அனுப்பப்படுவதில்லை. இதனால் இரண்டையும் சேர்த்தால் நீர்கொழும்பில் மரண எண்ணிக்கை நூரை தாண்டுகின்றன.
ஓட்டமாவடியில் நல்லட்டக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்களில் பெரியமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 22 பேரினதும் கம்மல்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரினதும் ஜனாஸாக்கள் அடங்குகின்றன. பெரியமுல்லையில் லாசரஸ் வீதியில் 9 மரணங்கள் சம்பவித்துள்ளன. ஏனையவை ஜும்ஆ மஸ்ஜித் மாவத்த, யூசுப் ஹாஜியார் மாவத்த, அபேசிங்கபுரம், செல்லகந்த, மீரிகம வீதி, றஹுமானாபாத், மற்றும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவையாகும். இதில் 21 வயது கர்ப்பினித்தாய் தொற்றுக்குள்ளாகி தன் குழந்தையை பெற்றபின் சில நாட்களில் மரணமான சோகமான சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இதுவரை நீர்கொழும்பில் 3184 பேர் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை நீர்கொழும்பில் இரண்டு கிராம உத்தியோகத்தர்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் ஒருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பிரதேச செயலாளர் அயிஷா பதிரன தெரிவித்தார். குடாப்பாடு, தூவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர்களே தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
குரண பிரதேச கிராம உத்தியோகத்தர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சுமார் 300 குடும்பங்கள் நீர்கொழும்பில் தனிமைப்படுத்தலுக்குள் இருப்பதாக கூறிய பிரதேச செயலாளர் அவர்களுக்கான உலர்உணவு பொதிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள ஏராளமானவர்கள் சமூகத்தில் உள்ளதாக அச்சம் தெரிவிக்கும் சுகாதாரத் துறையினர் அப்படிப்பட்டவர்கள் தயக்கம் காட்டாது உடணடியாக சிகிச்சை பெற்று தம்மை தனிமைப்படுத்திக்கொண்டால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் எனக்கூறுகின்றனர்.
Post a Comment