Header Ads



மைத்திரிபால எதனையும் செய்யவில்லை, அவர் வெறும் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதே நல்லது


அடுத்த ஜனாதிபதித் தேர்தலோடு ராஜபக்ஷக்கள் யுகம் இந்நாட்டில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இணையான  கட்சியொன்று விரைவில் உருவாக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

கொழும்பில் வைத்து நேற்று முன்தினம் (29) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், நாடு தற்போது முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலைமைகளில் இருந்து, பசில் ராஜபக்ஷவால் நாட்டை மீட்க முடியாது. பசிலால் மட்டுமல்ல இந்த அரசாங்கத்திலுள்ள ஏனையோராலும் அதனைச் செய்ய முடியாது என்றார்.

கடந்த அரசாங்கத்தில் பசில் இருந்தார். அப்போது அவர் செய்தது என்ன?

ராஜபக்‌ஷக்களுக்கு அரசாங்கத்தில் மற்றொரு பதவியை வழங்கும் செயற்பாடே இது. முழு நாட்டையும் ராஜபக்‌ஷக்களுக்கு வழங்கும் செயற்பாடு எனவும் சாடினார்.

மஹிந்த ராஜபக்‌ஷவை தவிர்த்து ஏனைய ராஜபக்‌ஷக்கள் அனைவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களே. பசில், சிராந்தி, புஸ்பா அல்லது ராஜபக்‌ஷக்களின் குடும்பத்தில் தற்போது பிறந்திருக்கும் குழந்தைகள்; அரசியலுக்கு வந்தாலும், நாட்டை நாசமாக்குவதைத் தவிர்த்து அவர்களால் வேறு எதனையும் செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இணையான  கட்சி ஒன்றை அமைப்போம். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக இருக்கும்போதே எதனையும் செய்யவில்லை. அமைச்சர் பதவிகளைக் கொண்டா எதனையும் செய்துவிடப் போகிறார்? அவர் வெறும் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதே நல்லது எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.