மனிதம் காக்கும் முஸ்லிம் தன்னார்வலர்கள் - நெகிழ்ச்சிக் கதைகள்
- மு. ஹரிஹரன் -
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களை, நோயாளிகளின் குடும்பத்தினரே தொட அச்சப்படும் நிலையில், அவர்களை பாதுகாப்பாக எடுத்துச்சென்று நல்லடக்கம் செய்யும் சேவையை கடந்த ஆண்டு முதல் தற்போது வரை மேற்கொண்டு வருகின்றனர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர்.
'நமது குடும்பத்தினர் ஒருவர் உயிரிழந்த பின்பு, அவர்களை தொட முடியாமல் தூரத்தில் நின்று அழுவது என்பது வேதனைக்குரிய ஒரு நிலை. அந்த காட்சியை தினமும் பல முறை நாங்கள் பார்த்து வருகிறோம்' என்கிறார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முஹமது சபீருல்லா.
'நான் ஏழாம் வகுப்புவரை தான் படித்துள்ளேன். மெக்கானிக்காக வேலை பார்த்தேன். பின்னர் ஆட்டோ ஓட்டினேன். பிறகு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியில் சேர்ந்தேன். கடந்த ஆண்டு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது உயிரிழந்தவர்களை முறையாக நல்லடக்கம் செய்ய எங்களது அமைப்பு முன் வந்தது. நானும் என்னை அந்த குழுவில் இணைத்துக் கொண்டேன். அதற்கு காரணம் எனக்கு 14 வயதாக இருக்கும்போது எனது தாய் மற்றும் தந்தை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அப்போது மருத்துவ ரீதியாக உதவி செய்யவும், சிகிச்சை சார்ந்த தகவல்களை விளக்கவும் எனக்கு யாரும் உதவி செய்யவில்லை. என்னுடைய நிலை யாருக்கும் வரக்கூடாது என நான் நினைத்திருந்தேன்.'
'தினமும் 5 முதல் 10 உடல்களை தொட்டு தூக்கி நல்லடக்கம் செய்து வருகிறோம். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்த போதும், நமக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மனதில் எப்போதும் இருக்கும்.' என்கிறார் இவர்.
கொரோனா நோயால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்யும் பணி மிகுந்த மனச்சோர்வை தரக்கூடியவை என்கிறார் சபீருல்லா.
'கொரோனாவால் தந்தை உயிரிழந்துவிட மகன்களே தொட்டுத்தூக்க அஞ்சுகின்றனர். அந்த நிலை மிகவும் வருத்ததிற்குறியது. குறிப்பாக, நோய் பாதிப்பால் உயிரிழந்த இளம் வயதினரை அடக்கம் செய்யும்போது பெரும் மனவேதனை எங்களை தொற்றிக் கொள்ளும். அதன் தாக்கம் மனச்சோர்வை தருவதோடு, பல நாட்களுக்கும் நீடிக்கும்.'
'எனக்கு இரண்டு குழந்தைகள். ஒருவர் முதல்வகுப்பு, மற்றொருவரை இப்போதுதான் பள்ளியில் சேர்த்துள்ளேன். நம்மால் குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் மனதில் இருக்கிறது. ஆனால், இந்த சேவையை நிறுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். எனது மனைவியும் நான் செய்யும் சேவைக்கு தடையாக இல்லாமல் உறுதுணையாக இருக்கிறார்.
கோவையில், கடந்த சில நாட்களாக உயிரிழப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. ஒரு கட்டத்தில் நகரில் உள்ள மயானங்கள் முழுவது சடலங்களாக நிரம்பி இருந்தது. மீண்டும் அந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பது மட்டுமே எங்களின் பிரார்த்தனையாக உள்ளது. ஒருவேளை அதைவிட மோசமான சூழல் ஏற்பட்டாலும் எங்களது சேவை தொடரும்' என உறுதியாக தெரிவிக்கிறார் சபீருல்லா.
கோவை மாவட்டத்தில், கடந்த ஆண்டு முதல் தற்போது வரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 288 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். BBC
Post a Comment