7 இலட்சம் மாணவர்கள் ஒன்லைன் வசதியின்றி தவிப்பு, போதிய Coverage இன்றி பெருமளவு பாதிப்பு - கல்வி அமைச்சு
மூவாயிரத்திற்கும் அதிகமான பாடசாலைகளில் ஒன்லைன் கல்வி வசதிகள் இல்லை எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறியுள்ளார்.
இவ்வாறான அசௌகரியங்களுக்கு மத்தியில் மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேராசிரியர் கபில பெரேரா நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு தௌிவுபடுத்தினார்.
நாடு முழுவதுமுள்ள 4.3 மில்லியன் பாடசாலை மாணவர்களில் சுமார் 7 இலட்சம் மாணவர்கள் ஒன்லைன் கல்வி நடவடிக்கைக்கான வசதியின்றி உள்ளதாகவும் அவர் கூறினார்.
கையடக்க தொலைபேசிகளுக்கு போதிய Coverage இன்மையால் பெருமளவான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் அவ்வாறான மாணவர்கள் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு Coverage வசதி உள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.
அவ்வாறு காணப்படுமாயின், சுகாதார வழிகாட்டல்களுடன் குறித்த பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்து கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால், பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டார்.
Post a Comment