Header Ads



500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரும் டக்ளஸ் - தனியார் Tv நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு


தனது நற்பெயருக்கும் கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்தியை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரியுள்ளார். இதுதொடர்பான கடிதம் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சட்டத்தரணியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொய்யாகப் புனையப்பட்ட செய்தி ஒன்று கடந்த 12.03.2021 அன்று இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.இச் செய்தியில், கிளிநொச்சி மாவட்டத்தில் வீட்டுத் திட்டப் பயனாளர் தெரிவில் முறைகேடு இடம்பெற்று இருப்பதாகவும், இந்த முறைகேட்டில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்டிருப்பதாகவும் பொய்யாகப் புனையப்பட்ட செய்தியை ஒளிபரப்பியிருந்தது.

இந்தச் செய்தி தீயநோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் தனக்கு அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்து தனது சட்டத்தரணி மூலம் கடற்றொழில் அமைச்சரினால் கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இந்த கோரிக்கைக் கடிதம் இத் தொலைக்காட்சியின் உரிமையாளரான நிறுவனத்திற்கும் அதன் பணிப்பாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளதுடன், தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்த செய்தியினால் ஏற்படுத்தப்பட்ட அவமானத்திற்கான நஷ்ட ஈடாக ரூபாய் 500 மில்லியன் பணத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அடுத்த இரு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவ்வாறு நஷ்டஈட்டை செலுத்தத் தவறும் பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கையூடாக நஷ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்வதற்காக வழக்குத் தாக்கல் செய்யப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.