Header Ads



தூக்கில் தொங்கிய இளைஞன் - உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் சேர்த்த பொலிசார்


கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பொலிஸ் பிரிவில் மன விரக்தியினால் தற்கொலை செய்து கொள்வதற்குத் தூக்கிட்டுக்கொண்ட இளைஞனின் உயிரை இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.

அரநாயக்க பொலிஸ் பிரிவு பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமாகாத 35 வயதுடைய நபரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அவரது தாய் உயிரிழந்த நிலையில் அதற்கு முன்னர் தந்தை உயிரிழந்துள்ளார்.

மூத்த சகோதரனின் வீட்டில் வாழும் அவருக்கு உடல் உபாதைகள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெற்றோர் உயிரிழந்த பின்னர் சகோதரனே அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்துள்ளார்.

திடீரென மன விரக்தியடைந்த அவர் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முயற்சித்துள்ளார்.

இதனை அவதானித்த சகோதரர் கத்தி கூச்சலித்தமையினால் அயலவர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

உடனடியாக அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் தூக்கிட்டவர் இன்னமும் உயிரிழக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. எனினும் அவரது கழுத்தை இறுக்கியுள்ள கம்பியை அகற்றுவதற்காக உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அங்கு உடனடியாக வைத்தியர்கள் சிகிச்சையளித்தமையினால் நோயாளியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

அவசரத்தின் போது பொலிஸ் அதிகாரிகள் தங்கள் வாகனத்திலேயே நோயாளியை ஏற்றிச் சென்று காப்பாற்ற உதவியமை குறித்து பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தங்கள் கடமைக்கு அப்பால் சென்று உதவியமை நெகிழ வைத்ததாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.