Header Ads



கெட்ட பெயரை நான் விரும்பவில்லை - தேர்தலில் இருந்து விலகினார் மன்சூர் அலிகான்


மன வேதனையில் இருப்பதாகவும், இந்தத் தேர்தலே வேண்டாம் என்று நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்த நடிகர் மன்சூர் அலிகான், அதில் இருந்து வெளியேறி, ‘தமிழ் தேசியப் புலிகள் கட்சி' என்ற புதிய கட்சியைக் கடந்த மாதம் தொடங்கினார். அதைத் தொடர்ந்து கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்தார் மன்சூர் அலிகான்.

இதற்காக பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்ச் 18ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது 'தேர்தலில் மிகப் பெரிய சவால் இருந்தாலும், துணிச்சலுடன் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளேன்' என்றார். அதனையடுத்து, பூங்காக்கள், மீன் மார்க்கெட், கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று, தொடர்ச்சியாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இதனையடுத்து, திடீரென நேற்று மாலை போட்டியிடப்போவதில்லை என்று மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். இது தொடர்பாகக் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். நான் மிகுந்த மன வேதனையுடன் இருக்கிறேன்.

எங்கே சென்றாலும் 'பாய், எவ்வளவு பணம் வாங்கிவிட்டீர்கள்?' என்று தொடர்ச்சியாகக் கேட்கிறார்கள். 'பாய் ஓட்டைப் பிரிப்பதற்காகத்தானே தேர்தலில் நிற்கிறீர்கள்?' என்றும் கிண்டலடிக்கிறார்கள்.

கெட்ட பெயருடன் நான் விரும்பவில்லை. ஒன்றுமே புரியவில்லை. இந்தத் தேர்தலே எனக்கு வேண்டாம். சென்னைக்குக் கிளம்பிவிட்டேன்'' என்று மன்சூர் அலிகான் தெரிவித்திருக்கிறார்.

No comments

Powered by Blogger.