2 வது PCR செய்யப்படும் வரை, ஜனாஸாவை எரிக்க வேண்டாம் - மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு
குறித்த மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயதுன்னே கொரயா ஆகியோர் முன்னிலையில் இன்று -15- இடம்பெற்ற போதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர், களுபோவில வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டடிருந்த நிலையில், கடந்த 31ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த இளைஞர் கொரோனா தொற்று காரணமாகவே உயிரிழந்த்தாக, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இரண்டாவது PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் வரை, சடலத்தை தகனம் செய்வதை தவிர்க்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, உயிரிழந்த நபரின் தந்தையால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக, களுபோவிலை வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அதுவரை சடலத்தை தகனம் செய்ய வேண்டாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment