Header Ads



ஜனாதிபதி ஆணைக்குழுவின் பல, சந்தேகங்களுக்கு பதில் வழங்கிய அப்துர் ராஸிக்


உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (16) இரண்டாம் நாளாக சாட்சியம் வழங்கினார். 

இதன் போது, அப்துர் ராசிக்கிடம் இஸ்லாம் தொடர்பான பலவிதமாக கேள்விகள் முன்வைக்கப்பட்ட நேரத்தில் அவை அனைத்திற்கும் ஆதாரங்களுடன் அவர் பதிலளித்தார். 

கடுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய ஹஸ்தூன் மற்றும் அவன் மனைவி சாரா என்கிற புலஸ்தினி மஹேந்திரன் தொடர்பாக விரிவான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக சாரா என்கிற புலஸ்தினி மஹேந்திரன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு உதவி செய்தமை தொடர்பில் கேள்வியெழுப்பிய ஆணைக்குழுவுக்கு சாரா புலஸ்தினி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு தன்னை நாடி வந்த முறைமை மற்றும் அவர் சுய விருப்பத்தின் பேரில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக கூறி அப்துர் ராசிக்கிடம் வழங்கிய கடிதம் பின்னர் அவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறுவதாகவும், இயக்கத்தை விட்டும் வெளியேறுவதாகவும் குறிப்பிட்டு அப்துர் ராசிக் அவர்களுக்கு அனுப்பி வைத்த பதிவுத் தபால் கடிதங்கள் அனைத்தும் ஆதாரங்களாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் அவர்களினால் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 

சாரா என்கிற புலஸ்தினி மஹேந்திரனுக்கு திருமணம் முடித்துக் கொடுத்ததற்கான பதிவுகள் தொடர்பான ஆவனங்களும் ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டதுடன் திருமணப் பதிவாளரின் முழு ஆலோசனையுடனேயே திருமணப் பதிவுகள் நடத்தப்பட்டன என்பதும் ஆணைக்குழுவுக்கு ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தப்பட்டது.

அப்துர் ராசிக் அவர்கள் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளராக இருந்த நேரத்தில் நடத்தப்பட்ட ஆர்பாட்டங்களிலும், இன்னும் சில இடங்களிலும் பேசப்பட்ட உரைகள் தொடர்பான விளக்கங்கள் ஆணைக்குழுவினால் கேட்க்கப்பட்ட நேரத்தில் அவை அனைத்துக்குமான தன் பக்க நியாயங்களை ஆதாரங்களுடன் ஆணைக்குழுவுக்கு அப்துர் ராகிக் அவர்கள் வழங்கியதுடன், அப்துர் ராசிக் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு மற்றும் மத நிந்தனை தொடர்பான வழக்கு தொடர்பில் அரச சட்டவாதி கேள்வியெழுப்ப முயன்ற நேரத்தில் அது தொடர்பான வழக்கு விசாரனையில் இருப்பதால் அவை பற்றி கேள்வியெழுப்ப தேவையில்லையென ஆணைக்குழு தெரிவித்தது.

அப்துர் ராசிக் அவர்களினால் சிங்களத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு 2015ல் வெளியிடப்பட்ட தென்னிந்திய மார்க்க அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் குர்ஆன் மொழிபெயர்ப்பு தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டது. 

அறிஞர் பி.ஜெ தொடர்பாக கேட்க்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஆதாரங்களுடன் பதில்கள் வழங்கப்பட்டதுடன் குர்ஆன் தொடர்பில் ஆணைக்குழு பல கேள்விகளை முன்வைக்க ஆரம்பித்தது.

அப்துர் ராசிக் அவர்களினால் மொழி பெயர்த்து வெளியிடப்பட்ட அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் சிங்கள மொழி பெயர்ப்பு குர்ஆன் மற்றும் சவுதிய அரசினால் வெளியிடப்படும் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியவற்றை திறந்து வைத்துக் கொண்டு அப்துர் ராசிக்கிடம் கேள்வியெழுப்ப ஆரம்பித்தது ஆணைக்குழு.

தவ்ஹீத் என்றால் என்ன? தவ்ஹீத் ஜமாஅத் என்றால் என்ன? என்று ஆணைக்குழு உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

தவ்ஹீத் என்றால் ஒரே இறைவனை வணங்குவதை குறிக்கும். முஸ்லிம்கள் அத்தனை பேரும் தவ்ஹீத் வாதிகள் தான். தவ்ஹீதை புறக்கணிப்பவர் முஸ்லிமாக இருக்க முடியாது. 

தவ்ஹீத் ஜமாஅத் என்றால் தவ்ஹீதை ஏற்றுக் கொண்ட குழு அல்லது அமைப்பாகும். 

அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டும் அவனல்லாத யாரையும், எதனையும் வணங்கக் கூடாது. முஹம்மத் நபி (ஸல்) அவர்களை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் அவர்களல்லாத யாருடைய கருத்துக்களையும் அவர்கள் எவ்வளவு பெரிய அறிஞர்களாக இருந்தாலும் அவர்களை பின்பற்றக் கூடாது என்பதையும் தான் இஸ்லாத்தின் அடிப்படையான தவ்ஹீத் கொள்கை தெளிவூட்டுகின்றது என ஆணைக்குழுவுக்கு அப்துர் ராசிக் தெளிவூட்டினார்.

அப்படியானால், முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபை பின்பற்றலாமா? என ஆணைக்குழு கேள்வியெழுப்பியது. 

முடியாது, முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் என்பவரையும் பின்பற்றக் கூடாது. அவர் குர்ஆன், மற்றும் நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்களை ஆதாரமாக கொண்டு கூறிய கருத்துக்களை நபிகள் நாயகத்தின் வழிகாட்டல் என்பதால் பின்பற்ற முடியுமே தவிர முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் கூறினார் என்பதற்காக பின்பற்ற முடியாது.

வஹ்ஹாபிஸம் என்றால் என்ன? அதனை உருவாக்கியது யார்? என ஆணைக்குழு இதன் போது மீண்டும் கேள்வியெழுப்பியது. 

வஹ்ஹாபிஸம் என்றொரு கொள்ளை இஸ்லாத்திலோ உலகில் எங்குமோ கிடையாது. அதற்கான கற்பிதங்களோ, கொள்கை வெளியீடுகளோ, கட்டுரைகளோ, புத்தங்களோ எதுவும் கிடையாது. தற்கொலை தாக்குதல்கள் நடத்துபவர்கள், அல்லது ஜிஹாதை தவறாக புரிந்து கொண்டு தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களை வஹ்ஹாபிகள் என ஊடகங்கள் அடையாளப்படுத்தியுள்ளது. உண்மையில் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் தீவிரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை. அதனை போதிக்கவும் இல்லை. அவருடைய மாணவர்கள் கூட அவர் பெயரினால் தீவிரவாதத்தை போதிக்க வில்லை. தற்போதைய சமூதி அரேபியாவின் உருவாக்குணர்களில் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் மிக முக்கியமானவர். ஒரு இறைவனை வணங்க வேண்டும் என பிரச்சாரம் செய்தார்.

அப்படியானால், தவ்ஹீதின் தந்தை யார்? அப்துல் வஹ்ஹாப் இல்லையா? என ஆணைக்குழு கேள்வியெழுப்பியது.

தவ்ஹீதின் தந்தை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தான் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் என்பவர் ஒரு ஏகத்துவ பிரச்சாரகர் ஆவார் என அப்துர் ராசிக் பதிலளித்தார்.

கிதாபுத் தவ்ஹீத் என்ற அவருடைய நூலை படித்துள்ளீர்களா? என ஆணைக்குழு கேள்வியெழுப்பியது.

ஆம். அதனை படித்துள்ளேன். ஆனால் அதில் எவ்விதமான தீவிரவாதத்தை ஆதரிக்கும் அல்லது பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கருத்துக்கள் கிடையாது. ஆணைக்குழுவும் அது பற்றி ஆராய்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆணைக்குழுவுக்கும் கிதாபுத் தவ்ஹீதின் சிங்கள மொழிபெயர்ப்பு ஒன்றை தருகின்றேன். என கிதாபுத் தவ்ஹீதின் ஒரு பிரதியை ஆணைக்குழுவுக்கும் அப்துர் ராசிக் ஒப்படைத்தார்.

ஜிஹாத் என்றால் என்ன? ஜிஹாதில் பல வகைகள் இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு ஜிஹாத் என்றால் ஒரு அரசாங்கம் தன் நாட்டை பாதுகாத்துக் கொள்வதற்காக நாட்டு இராணுவத்தின் மூலம் யுத்தம் செய்வதே ஜிஹாத் என குர்ஆனில் குறிப்பிடப்படுவதாகவும், தனித் தனிக் குழுக்களோ, பிரிவுகளோ அப்பாவி மக்களை கொல்வதும், குண்டுத் தாக்குதல் நடத்துவதும் இஸ்லாத்தின் பார்வையில் ஒரு போதும் ஜிஹாதாக ஆகாது. அது தெளிவான பயங்கரவாதமாகும் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிம்களாக இருக்க முடியாது என்பதையும் திருமறைக் குர்ஆனின் வசன ஆதாரங்களை ஒப்படைத்து சபைக்கு தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது.

அதே போல் ஷரீஅத் சட்டம் என்றால் என்ன? என ஆணைக்குழுவினால் கேள்வியெழுப்ப்பட்ட நேரத்தில் இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் பொதுவாகவே ஷரீஅத் சட்டம் என்ற பெயரில் தான் அறியப்படுகின்றது. அதில் குற்றவியல் சட்டங்களும் அடங்கும், சிவில் சட்டங்களும் அடங்கும் இலங்கை போன்ற நாட்டில் வாழும் முஸ்லிம்கள் யாரும் குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்லை. நடைமுறைப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைப்பதும் இல்லை. 

நாம் இங்கு முஸ்லிம் தனியார் சட்டம் எனும் பெயரில் நடைமுறைப்படுத்தும் ஷரீஅத் சட்டத்தில் திருமணம் முடித்தல், விவாகரத்து, சொத்துப் பங்கீடு போன்ற முஸ்லிம்களின் அன்றாட வாழ்வியல் தொடர்பான விவகாரங்கள் தான் அடங்கப் பெற்றுள்ளது. 

எனவேதான் சிவில் விவகாரங்கள் தொடர்பாக ஷரீஆ சட்டம் குர்ஆன் மற்றும் நபிவழிப் பிரகாரம் அமையப்பெற வேண்டும் என நாம் கோரிக்கை வைக்கிறோம் என அப்துர் ராசிக் குர்ஆன் ஆதாரங்களுடன் ஆணைக்குழுவுக்கு தெளிவூட்டினார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாடு பிடிப்பதற்காக ஆக்கிரமிப்பு யுத்தங்களை நடத்தினார்கள் தானே? என கேள்வியெழுப்பப்பட்ட நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யுத்தங்கள் செய்தமைக்கான காரணம். சூழல் அதற்கான நியாயங்கள் அனைத்தையும் ஆதாரங்களுடனும், உரிய தர்க்க நியாயங்களுடனும் ஆணைக்குழுவுக்கு அப்துர் ராசிக் தெளிவூட்டினார்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதை ஏன் மறுக்கிறீர்கள்? முஹம்மத் நபியவர்களின் பிறந்த தினத்திற்கு இலங்கை அரசும் விடுமுறை அறிவித்துள்ளதே என்று ஆணைக்குழு கேள்வியெழுப்பியது.

முஹம்மத் நபியவர்களின் பிறந்த தினக் கொண்டாட்டத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க வில்லை. குர்ஆனும் அனுமதிக்க வில்லை. நபிகள் நாயகத்தின் எந்தவொரு தோழர்களும் கூட அவருக்காக பிறந்த தின கொண்டாட்டங்களை நடத்தவில்லை. இஸ்லாத்தின் கொள்கைகளில் இப்படியொரு கொண்டாட்டமே கிடையாது. முஹம்மத் நபியவர்களை நாங்கள் உயிருக்கு மேல் நேசிக்கின்றோம். ஆனால் அவருக்காக அவர் காட்டித் தராத பிறந்த தினத்தை கொண்டாட மாட்டோம்.

முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளையும், ஹஜ் பெருநாளையும் தான் கொண்டாட்ட தினங்களாக அனுஷ்டிக்க வேண்டுமென நபிகள் நாயகம் அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். எனவே தான் நபிகள் நாயகத்தின் கட்டளைக்கு மாற்றமாக நாம் செல்வதில்லை.

அப்படியானால், கடந்த பல வருடங்களாக இலங்கை முஸ்லிம்கள் இதனை அறியாமலா செய்து வருகிறார்கள் என ஆணைக்குழு உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினார்கள். ஆம். எமது முன்னோர் இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனிலிருந்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களில் இருந்தும் மார்க்க வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ளாமல் தமது முன்னோர்களின் வழிகளை இஸ்லாம் என்று பின்பற்றியுள்ளார்கள். 

குர்ஆனின் மொழிபெயர்ப்புகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு உள்ளாகத்தான் வெளிவந்துள்ளது. நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்களான ஹதீஸ்களும் அண்மைய காலங்களில் தான் மொழி பெயர்ப்புகளாக வந்துள்ளன. இதற்கு முன்னால் முன்னோர்கள் எதை இஸ்லாம் என்று கூறினார்களோ அதுதான் இஸ்லாம் என பெரும்பாலானவர்களினால் பின்பற்றப்பட்டது. 

நாம் தற்போது குர்ஆனிலிருந்தும் நபிகள் நாயகத்தின் ஆதாரபூர்வமான வழிகாட்டல்களிலிருந்தும் இஸ்லாத்தை போதிக்கின்றோம். எனவே சரியான இஸ்லாத்தை பின்பற்றக் கூடிய ஒரு சமூகத்தை தற்போது கட்டமைத்து வருகின்றோம். இந்த கட்டமைப்பு எதிர்கால இலங்கையின் ஜனநாயக வாழ்வுக்கு மிக பொருத்தமானதாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது என்றார் அப்துர் ராசிக்.

நீங்கள் வெளியிட்டுள்ள குர்ஆன் மொழிபெயர்பை உலமா சபை ஏற்றுக் கொள்ளவில்லை என உலமா சபையின் தலைவர் சாட்சியம் வழங்கினார். அவர்கள் ஏன் உங்கள் குர்ஆன் மொழிபெயர்ப்பை ஏற்றுக் கொள்வதில்லை?

அவர்கள் வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்புக்கும் உங்கள் மொழிபெயர்ப்புக்கும் என்ன வித்தியாசம் என ஆணைக்குழு உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

நாம் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் அவனல்லாத யாரையும் எதனையும் பின்பற்றக் கூடாது என்பதுடன் முஹம்மத் நபியவர்களை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் அவறல்லாத யாரையும் எதற்காகவும் பின்பற்றக் கூடாது என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இஸ்லாத்தில் இல்லாத எந்தவொரு காரியத்தையும் இஸ்லாத்தின் பெயரால் செய்யக் கூடாது என்பதை பிரச்சாரம் செய்கிறோம்.

ஆனால் அவர்களோ இடத்திற்கும், சூழலுக்கும் தேவையான வகையில் இஸ்லாத்தை மாற்றி மாற்றி மக்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்கிறார்கள். நாம் பின்பற்றும் மார்க்கத்தில் எவ்வித பொய்களோ, பிழைகளோ கிடையாது என்பதினால் நாங்கள் மார்க்க விவகாரங்களில் விட்டுக் கொடுப்பதில்லை.

இஸ்லாத்தின் பெண்கள் முகத்திரை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. நபிகள் நாயகத்தின் மனைவியர் மாத்திரம் தான் முகத்தை மறைத்து ஆடை அணிய வேண்டும் சாதாரண பெண்கள் முகத்தை திறக்க வேண்டும் இதுதான் இஸ்லாத்தின் கொள்கையாகும். இதற்காக அனைத்து ஆதாரங்களையும் நாம் வெளியிட்டுள்ள அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் குர்ஆன் மொழி பெயர்ப்பின் சிங்கள மொழி பெயர்ப்பிலும் ஆதார இலக்கங்களுடன் குறிப்பிட்டுள்ளோம். அதனை நீங்கள் இப்போதும் பார்க்க முடியும்.

ஆனால், உலமா சபையினர் வெளியிட்டுள்ள குர்ஆன் மொழி பெயர்பை எடுத்து பாருங்கள். அதில் பெண்கள் முகத்திரை அணிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்கள் அதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் சிலரை ஆதாரம் காட்டியுள்ளார்கள். இஸ்லாத்தின் அறிஞர்கள் சொல்வது மார்க்கமாகாது. முஹம்மத் நபியவர்கள் சொல்வது தான் மார்க்கமாகும். ஆனால் அவர்களோ தவறானதொரு கொள்கைக்கு அறிஞர்களை ஆதாரம் காட்டியுள்ளார்கள். காரணம் முஹம்மத் நபியவர்களின் வாழ்விலிருந்து சாதாரண பெண்கள் முகத்திரை அணிய வேண்டும் என இவர்களினால் ஆதாரம் காட்ட முடியாது.

எமது மொழிபெயர்ப்பு இஸ்லாத்தின் அடிப்படையில் மிகத் தெளிவாக அமைந்துள்ளது மாத்திரமன்றி தேசிய பாதுகாப்புக்கும் எவ்வித தடையுமில்லாமல் இருக்கிறது.

அதே போல் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையான அல்லாஹ்வை பற்றிய நம்பிக்கையிலேயே அவர்கள் தவறான கொள்கையில் இருக்கிறார்கள். அல்லாஹ்வை ஒன்றுமற்ற சூனியம் போல் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அல்லாஹ்வை உருவமற்றவனாக இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு மாற்றமாக அவர்களுடைய குர்ஆன் மொழிபெயர்ப்பில் குறிப்பிடுகிறார்கள்.


இஸ்லாத்தில் இறைவனுக்கு உருவம் இல்லையென்ற கொள்கை கிடையாது. இறைவன் உருமுள்ளவன் தான். ஆனால் அந்த உருவம் எப்படியானது என்பது மனிதர்களுக்கு தெரியாது. அந்த உருவத்தை சித்தரிக்கவும் கூடாது. ஆனால் குர்ஆனிய ஆதாரங்களின் அடிப்படையில் உருவமுள்ள இறைவன் என்ற நம்பிக்கை தான் இஸ்லாம் வலியுறுத்தும் தூய நம்பிக்கையாகும்.

ஆனால் உலமா சபையினரோ இந்த அடிப்படை கொள்கைக்கு மாற்றமான கொள்கைளை தமது மொழிபெயர்ப்பில் திட்டமிட்டு செய்துள்ளார்கள். எனவே அவர்களின் கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. 

அவர்கள் எமது குர்ஆனை ஏற்றுக் கொள்வதற்கு மார்க்க அடிப்படையில் எவ்வித தடைகளும் கிடையாது. எமது மொழி பெயர்ப்பு தொடர்பில் அவர்கள் விரும்பினால் ஆதாரங்களுடன் அவர்களுடன் எப்போதும் சுமுக கலந்துரையாடலை நடத்த நாம் தயாராகவே இருக்கிறோம். 

எல்லாவற்றுக்கும் மேலாக, உலமா சபையினர் எமது குர்ஆன் மொழிபெயர்ப்பை ஏற்றுக் கொண்டால் தான் அது சரியானது என்ற நிலை நியாயமற்றது. இஸ்லாம் சார்ந்த விவகாரங்களில் உலமா சபையினரின் முடிவு தான் இறுதி முடிவு என்ற எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. என அப்துர் ராசிக் ஆணைக்குழுவுக்கு ஆதாரங்களுடன் பதிலளித்தார்.

இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமைகள் இருக்கிறதா? சம உரிமையை இஸ்லாம் வழங்குகிறதா? என ஆணைக்குழு அப்துர் ராசிக்கிடம் கேள்வியெழுப்பியது.

ஆம். இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமை அளிக்கிறது என்பதை விட ஆண்களை விட பல மடங்கு உயரந்த உரிமையை வழங்குகின்றது. குடும்பத்தை நடத்துதல் போன்ற ஒரு சில விவகாரங்களில் மட்டும் பெண்களை விட ஆண்களை இஸ்லாம் முற்படுத்துகின்றது. 

அரசியல், கல்வி, ஆன்மீகம் என அனைத்திலும் இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமைக்கு அதிகமான உரிமைகளை மிகத்தெளிவாக வழங்கியுள்ளது. என அதற்குறிய ஆதாரங்களுடன் அப்துர் ராசிக் ஆணைக்குழுவுக்கு தெளிவூட்டினார்.

இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என ஆணைக்குழு அப்துர் ராசிக்கிடம் வினவிய நேரத்தில்,

நான் இந்நாட்டில் இலவச கல்வியில் கற்று, பட்டம் பெற்ற ஒரு பட்டதாரி. என் தாய் நாட்டுக்கு நானோ எனது அமைப்போ ஒரு போதும் துரோகம் செய்யமாட்டோம். தவ்ஹீத் அமைப்புகள் என்றாலே தீவிரவாத அமைப்புகள் என ஊடகங்கள் காட்ட முற்படுகின்றன. ஸஹ்ரானின் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தையும் தடை செய்யப்பட்ட மொத்த 3 அமைப்புக்களையும் தவிர மற்ற எந்த இஸ்லாமிய அமைப்புகளும் இங்கு தீவிரவாதத்தில் ஈடுபடவில்லை. ஊடகங்கள் இதனை பிரிந்தறிந்து செய்திகளை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதே போல் தனிப்பட்ட வகையில் என் பெயரை கெடுக்கும் முயற்சியிலும் ஊடகங்கள் ஈடுபடுகின்றன இவற்றை ஊடகங்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும். 

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தை பொருத்த வரையில் இலங்கையில் இஸ்லாமிய பிரச்சாரத்தை தூய வடிவத்தில் மேற்கொள்ளும் அதே நேரம் ஜாதி, மத, பேதங்கள் இன்றி இலங்கை மக்கள் அனைவருக்காகவும் சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். 

லொக்டவுனில் சிக்கியுள்ள மக்களுக்காக இந்நேரத்தில் கூட தொடர் உலர் உணவுகளை வழங்கி உதவிக் கொண்டிருக்கின்றோம். எம்மை தீவிரவாதிகளாக மட்டுமே காட்ட முனையும் ஊடகங்கள் நாம் செய்யும் நல்ல பணிகளை மூடி மறைக்க முனைகிறது. எனவே ஊடகங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என ஆணைக்குழுவில் கேட்டுக் கொள்கிறேன் என அப்துர் ராசிக் தெரிவித்தார்.

சுமார் 06 மணித்தியாளங்களுக்கு மேலாக ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் இரவு 11 மணிக்கு ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்.

9 comments:

  1. தனது கொள்கை மட்டுமே சரியானது மற்றைய அனைவரினதும்( பெரும்பான்மையினரது) மார்க்கம் பிழையானது என்பதே தங்கள் கொள்கையின் அடித்தளமாக உள்ளது என்பதை ஆரம்பம் முதல் இறுதி வரை கூறியதன் மூலம் மனித சமூகத்தின் மீதான வெறுப்புணர்ச்சி ஏற்படும் முறையினை ஆணைக்குழுவுக்கு விளக்கியுள்ளார்

    ReplyDelete
  2. வரவேற்கிறோம் நல்ல செய்திகளை கொடுத்துள்ளீர்கள் இப்படி சொல்லி இருக்கலாம் என்று நினைக்க வைக்கிறது அதாவது குர்ஆன் ஹதீஸ் அல்லாதவைகளை பின்பற்றுவோர் தீவிரவாதிகளாக ஆக முடியும் ஆனால் குர்ஆன் ஹதீஸை மாத்திரம் பின்பற்றுவோர் அகிம்சை,நல்லொழுக்கம்,நல்லிணக்கக்கம் (குடும்பத்தாதவர்கள்,அயலவர்கள்,மாற்று மத்தவர்கள்) போன்றவருடன் சிறப்பான இலங்கையனாக இருப்பர் என்ற செய்தியையும் சொல்லி இருக்கலாம் என்று தோன்றுகிறது

    ReplyDelete
  3. இஸ்லாத்தில் அறிஞர்கள் சொல்வது மார்க்கமாகாதாம். ஆனால் பீ.ஜே. சொல்வது தான் மார்க்கமாம். பீ ஜே என்பவர் நபியா?

    ReplyDelete
  4. எமது சமூகத்தை காட்டிக்கொடுக்கும் நயவஞ்சகர்கள் தூரத்தில் இல்லை

    ReplyDelete
  5. Jaffna muslim should not publish this article coz totally misguided the commission & muslim and the people, totally lying . They not innocents , definitely they take arm against the pure sunna muslims and the others in future. they created the current situation in this country.

    ReplyDelete
  6. Masha Allah. Allah grant you more strength and long life

    ReplyDelete
  7. இவனிடமிருந்து அல்லாஹ்தான் இஸ்லாத்தைப் பாதுகாக்க வேண்டும்.

    ReplyDelete
  8. தெளிவாகவும் ஆணித்தரமாகவும் விவாதிக்கும் திறமையில் மாற்றுக்கருத்து கூறமுடியாது.ஆனால் அதிக பிரசங்கித்தனம் அகங்காரத்தை வெளிப்படுத்தக்கூடியதான சொற்பொழிவுகள் வீதியால் போவதை வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்துவிடும். பாரம்பரிய முஸ்லிம்களின் கொள்கைகளிலிருந்து தற்போதைய மாற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்பதனை அழகாக தெளிவுபடுத்தி இருக்கிறார். இவ்விடயம் தான் முஸ்லிம்களை விமர்சிப்பவர்களின் முக்கியமான கருப்பொருளாக உள்ளது. அதனால் தான் ஆணைக்குழு அதற்கும் முக்கியம் கொடுத்து விபரம் பெற்றிருக்கிறது போலும்.

    ReplyDelete

Powered by Blogger.