Header Ads



உலகம் அழியும் வரை கொழும்பு, மக்களின் வாழ்க்கை இப்படியேதான் கழியுமா..?


- Naushad Mohideen - 

இலங்கையில் கடந்த அக்டோபர் மாத ஆரம்பத்தில் தொடங்கிய கொரோணா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தாக்கத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரம் தலைநகரம் கொழும்பே ஆகும். இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் பிரதான காரணமாகவும் இருப்பது தலைநகர் கொழும்பின் சனத்தொகை பரம்பலே ஆகும். கொழும்பு 2-8-9-10-11-12-13-14-15 என மாநகரப் பிரிவுகளை எடுத்துப் பார்த்தால் சந்து பொந்துகளில் எல்லாம் கடைகளும் வீடுகளும் தாராளமாகக் காணப்படும் பிரதேசங்களாகவே இவை அமைந்துள்ளன. 

இந்த நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஒரு நாட்டின் தலைநகரக் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும்? தலைநகருக்குள் சனத்தொகைப் பரம்பல் எவ்வாறு அமைய வேண்டும்? அங்கு வாழும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? என்பன உற்பட எந்த விதமான பிரதான பிரச்சினைகளிலும், திட்டமிடலிலும் கவனம் செலுத்தக் கூடிய தீர்க்க தரிசனம் மாறி மாறி பதவிக்கு வந்த எந்த ஒரு அரசிடமும் இருக்கவில்லை என்பதே வெற்கக் கேடான கவலைக்குரிய யதார்த்தமாகும். 

இதனால் கொழும்பு மாநகரில் கடைகளும் வீடுகளும், குடியிருப்புக்களும், தொழிற்சாலைகளும் கண்டபடி பெருக்கெடுக்கத் தொடங்கின. மாநகர நிர்வாகமாகட்டும் மத்திய அரச நிர்வாகமாகட்டும் தலைநகரை மிகச்சிறந்த வாழ்விடமாகவோ அல்லது வர்த்தக பூமியாகவோ கட்டி எழுப்பத் தவறிவிட்டன. இதன் விளைவால் ஏற்பட்ட சந்தடியும் நெருக்கடியும் தான் இன்றைய நிலைக்கு பிரதான காரணமாகும். 

மத்தியில்; பதவிக்கு வந்தவர்கள் எல்லோருமே தங்களுக்குத் தேவையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கூட்டாண்மை நிறுவனங்களுக்கு கொழும்பு நகரைக் கூறு போட்டுத் தாரை வார்த்துக் கொடுப்பதில் காட்டிய ஆர்வத்தை அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் வாழ்வாதாரத்தையும் செழிக்க வைப்பதில் காட்டத் தவறியுள்ளனர் என்பது கண்கூடாகத் தெரியும் உண்மையாகும். கொழும்பு மாநகர எல்லைக்குள் அடிப்படை வசதிகளுள் ஒன்றான மலசல கூட வசதிகள் கூட இன்றி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னும் வாழுகின்றனர் என்பது ஜீரணிப்பதற்கு கஷ்டமான ஒரு நிதர்சணமாகும்.

 மேலே குறிப்பிடப்படாத கொழும்பு மாநகரப் பிரிவுகளை அதாவது 1-3-4-5-6-7 என்பனவற்றை எடுத்துக் கொண்டால் அது வேறு ஒரு உலகம். அந்த உலகத்துக்குள்ளும் வெளியே கண்ணுக்குத் தெரியாத மூளை முடுக்குகள், சந்து பொந்துகள், அவலமான வாழ்க்கை முறை என்பன அடங்கியுள்ளன. ஆனால் வெளி உலகின் தேவை கருதி அவை மறைக்கப்பட்டுள்ளன. வெளியில் தெரிவது அந்தப் பகுதிகளின் ஆடம்பரம் மட்டுமே.

கடந்த காலங்களில் மக்களின் குடியிருப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகக் சூறிக் கொண்டு பதவியில் இருந்த அரசாங்கங்கள் ஏற்படுத்திய அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்கள் கொழும்பு மாநகர மக்களின் வாழ்வுக்கு ஒரு வரமாக அன்றி, சாபமாகவே மாறி உள்ளன என்பதை இன்றைய கொரோணா பிரச்சினை மிகத் தெளிவாக உணர்த்தி நிற்கின்றது. இந்த அடுக்கு மனைத் திட்டங்கள் அனைத்தும் இன்று கொரோணாவிடம் சிக்கி ஆபத்தான பூமிகளாக மாறி உள்ளன. மக்கள் ஏற்கனவே வாழ்ந்த இடத்தில் நெருக்கடிகள் உள்ளதாகவும், சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் கூறிக் கொண்டு அவர்கள் வாழ்ந்த பாரம்பரிய இடங்களைப் பிடுங்கி கூட்டாண்மை நிறுவனங்களுக்கு வழங்கிவிட்டு மாடி வீடுகள் என்ற பெயரில் மீண்டும் அந்த மக்கள் பறவைக் கூண்டுகளுக்குள் தான் அடைக்கப்பட்டனர். ஒரே வித்தியாசம் முன்னர் அந்தக் கூண்டுகளை வரிசையாகப் பார்த்தோம் இப்போது புதிய இடங்களில் அவற்றை அன்னாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

வெளி மாகாணங்களில் இருந்து வந்து கொழும்பு மாநகர மக்களின் வாழ்க்கை முறை மற்றும் வாழ்வாதாரங்கள் என்பன பற்றி நூற்றுக் கணக்கான தனிநபர்களும் அமைப்புக்களும்; அய்வுகளை நடத்தி பல்வேறு தலைப்புக்களில் ஆய்வு அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். தங்களது கல்வித் தரத்தை மேம்படுத்திக் கொண்டு சமூகத்தில் தமக்கு ஒரு அந்தஸ்த்தைப் பெற்றுக் கொள்வது மட்டுமே இந்த ஆய்வுகளினதும் ஆய்வாளர்களினதும் நோக்காக இருந்துள்ளதே தவிர கொழும்பு மாநகர மக்களின் வாழ்க்கையில் ஒரு விடியலை ஏற்படுத்த இவர்களால் எந்த விதமான முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் இல்லை. கொழும்பு மாநகர மக்களின் வாழ்வியலை விலாவரியாக ஆராய்ந்த இந்த மேதைகள் குறைந்த பட்சம் தங்களது ஆய்வுகளில் தங்களால் விதைந்துரைக்கப்பட்ட விடயங்களில் ஒரு சிலதையாவது அமுல் செய்ய ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளனரா என்ற கேள்வியும் இன்று வரை நீடிக்கின்றது. இவர்களைப் பொருத்தமட்டில் கொழும்பு மாநகரம் ஒரு ஆய்வுக் களம். தமது கோட்பாடுகளை தமக்கு ஏற்ற விதத்தில் நிறுவிக் கொள்வதற்கான பலிக்கடாக்கள் தான் அங்கு வாழும் மக்கள்.

இப்படித்தான் கொழும்பு மாநகர மக்களின் வாழ்வுமுறை கண்டவர்கள் எல்லாம் ஆய்வு செய்யும் ஒரு விடயமாக இருந்து வந்துள்ளதே தவிர அவர்கள் அனுபவித்து வரும் அவலத்துக்கு உரிய தீர்வை அரசோ அல்லது அரச சார்பற்ற பிரிவுகளோ முன்னெடுக்கத் தவறிவிட்டன. இதன் உச்ச கட்ட விளைவைத்தான் இன்றைய மோசமான நோய்ப்பரவல் காலகட்டத்தில் கொழும்பு மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த உலகம் அழியும் வரை அந்த அப்பாவி மக்களின் வாழ்க்கை இப்படியேத் தான் கழியுமா என்ற கவலையே தற்போது மேலோங்கி உள்ளது.

3 comments:

  1. What more pathetic is 90% of all those who live in run down area are Muslims..
    There is no good Muslim schools in Colombo yet ...but we have Islamic groups who get millions of Saudi money but they did not see all these ..they spent millions on building additional mosques for their groups ..
    Now we pay the price for all those mistake we have had done in the past .
    What we need today is not merely research groups .
    Now so called world Sri Lankan Muslim forum operate in the UK; Canada and some other Western countries please contact them and tell them they should do something about Muslim education in Colombo areas .
    We know what problems are ???
    But we do not know how to deal with them ..
    1) long and short term solutions..
    1) speak to local political leaders about these issues ..
    Highlight them all these problems..
    2) try to help school drop outs from Colombo areas and guide them to do some vocational or professional courses ..
    3) collectively Muslim community is responsible for all this ..
    4) all Islamic groups should focus on this rather than having groups culture .
    If only they spend money on these problems they would have earned more reward from Allah rather fighting for Bida and Kanthori

    ReplyDelete
  2. The main reason is most of them don't think about change or don't care about it... Just living as wayfarer...

    ReplyDelete
  3. உண்மையில் தூக்கத்தில் இருப்பவனை எதிர்க்கலாம். தூங்குவது போல் நடிப்பவனை ஒரு நாளும் எழுப்ப முடியாது. நமது நாட்டில் நடப்பவையும் அப்படித்தான். அனைத்தும் அறியாதவர்களா என்ன? ஆர்ப்பாட்டம் செய்து நியாயம் கேட்க?

    ReplyDelete

Powered by Blogger.