புத்தளத்தில் மேலும் 5 பேர் அடையாளம்
புத்தளம் மற்றும் தங்கொட்டுவ பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய புத்தளம்-வெட்டுக்குளம் பிரதேசத்தில் ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நாளை (05) கட்டார் செல்லவிருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நீர்கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில், கடந்த 02 ஆம் திகதி இவர் மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கை மூலமே தொற்று உறுதியாகியுள்ளது.
அடையாளம் காணப்பட்ட மேற்படி தொற்றாளர் சிகிச்சைக்காக தங்கொட்டுவ கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, தங்கொட்டுவ பிரதேசத்தில் இயங்கிவரும் ஆடை சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றிவந்த நால்வரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவே, தொற்றாளர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களை கண்டறிய, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment