விழித்தெழுமா OR மீண்டும் விழுமா நம் சமூகம்...?
- Dr. Liya uddeen -
பலத்த புயல் காற்று, கோரத் தாண்டவமாடி, இடி மின்னலுடன் கூடிய கடும் மழை, பலத்த சேதத்தை ( உயிர், உடமை) ஏற்படுத்திய பின் சற்று அமைதியானது போன்றதொரு உணர்வு...
மழை ஓய்ந்தாலும் தூவானம் இடையிடையே தொடரத்தான் செய்கிறது...
என்னவெல்லாம் நடக்கக் கூடாதோ அவ்வளவும் நடந்து முடிந்த அரங்கேற்றங்கள் - பல உயிர்கள் பறிக்கப்பட்டு, உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டு / சேதமாக்கப்பட்டு, உரிமைக் குரல்கள் நசுக்கப்பட்ட அவலங்கள்...
இவை நம் வரலாற்றின் கறை படிந்த பக்கங்கள்...
இப்போது ஒன்றுமே நடக்காதது போல் எல்லாவற்றையும் மறந்து, இதுவும் கடந்து போகும், இனி நாமும் மறந்து போவோம் என்ற நினைப்பில் மீண்டும் ஒரு போலிச் "சக ஜீவன" வில் திளைத்திருக்கிறது எமது உம்மத்...
ஆனால்....
ஒன்று மட்டும் நிச்சயம், கடந்து வந்த கரடுமுரடான பாதையை ஒருமுறை திரும்பிப் பார்த்து , மீள்பரிசீலனை செய்து, தேவையானவற்றைச் செப்பனிட்டு எமது பக்க தவறுகளையும் திருத்திக் கொண்டால் மட்டுமே ( நாம் சிறுபான்மையினர் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்) எமது எதிர்காலச் சந்ததியினர் நிம்மதியாகவும், கெளரவமாகவும் வாழும் நிலை ஏற்படும் .
தவறினால் அவர்களும் தோல்வி மனப் பான்மையுடனும், பாதிக்கப்பட்ட மனப் பான்மையுடனுமே வாழ்வார்கள்.
எம்மைச் சீண்டுவதெற்கென்றே ஏவப்பட்ட ஏஜண்டுகள் தற்போது அவர்களது ('எம்பி') பதவிகளுக்கான போட்டியில் சற்று 'பிஸி' போல் தெரிகிறது, இந்த 'இண்டர்வல்' ஐச் சரியாகப் பயன் படுத்திக் கொள்வோம்...
சரி, இனி சமூகமாகச் செய்ய வேண்டிய திட்டமிடல்கள் தான் என்ன...?
1) பலமான சன்மார்க்க, சமூக, சிவில் மற்றும் அரசியல் கட்டமைப்பொன்றை உருவாக்குதல்.
இஸ்லாம் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் ஐக்கியத்தையும் வலியுறுத்தும் சாந்தி மார்க்கம்.
ஆனால் ஏனைய பிற சமூகங்களில் காணப்படுகின்ற சமூக ஒற்றுமையும், கட்டுக்கோப்பும் எங்களிடம் இல்லாமல் போனது பெரியதொரு துரதிர்ஷ்டமே...
"அகீதா" வுக்காக அன்றி ஈமானின் கிளை அம்சங்களின் சில்லறைப் பிரச்சினைகளுக்குள் சிக்குண்டு, சின்னாபின்னமாகியிருக்கும் உம்மத்தை ஐக்கியப் படுத்துவது காலத்தின் மிகக் கட்டாயமான, தேவையாகும்.
முரண்பாடுகளுக்குள் தொடர்ந்தும் முட்டி மோதாமல் முடியுமானவற்றில் சில விட்டுக் கொடுப்புகளுடனும், உடன்பாடுகளில் உடன் பட்டும் சேர்ந்து பயணிக்க சம்பந்தப்பட்ட சகல தரப்புகளும் முன் வரவேண்டும்.
இங்கு குறைவாகப் பேசி, நிறைவாகச் செய்யும் ACJU மற்றும் NSC போன்ற வை பிரதான பங்கு வகிக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
'கொரோனா- முதல் அலை' யின் போது இலங்கையிலுள்ள பல (சுமார்17) சிவில், சன்மார்க்க அமைப்புகள் ஒன்றாக இணைந்து, கூட்டாக அறிக்கை விட்டிருந்தமை நல்லதொரு முன் மாதிரியாகும்.
சமூக நலன் கருதி இந்த முன்மாதிரி என்றும் நிலைக்க வேண்டும் என்பதே பலத்த எதிர் பார்ப்பாகும்.
அத்துடன் இனியும் நம் சமூகத்தின் உள்வீட்டு விவகாரங்களைக் காட்டியும், கூட்டியும் கொடுக்கும் கைங்கரியங்கள் தொடருமாயின் உம்மத்தின் இருப்பும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகலாம், அப்போது இன்னுமொரு மியன்மார் உருவாவது தவிர்க்க முடியாததொன்றாகிவிடும்.
அடுத்து மிகவும் முக்கியமானது தான் அரசியல் நிலைமை.
சந்தேகமேயில்லை, அரசியலே நம் சமூகத்தின் ஒட்டுமொத்த உரிமைக் குரல்.
முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய ஆழ்ந்த அரசியல் அறிவோடு உத்தரவாதமான, காய் நகர்த்தல்களை வேண்டி நிற்கும் மிக முக்கியமான காலகட்டமிது.
சமகால அரசியல் நிலமைகளைக் கருத்திற் கொண்டு , உரிமைகளை வென்றெடுப்பதில் புத்திஜீவிகளது காத்திரமான கருத்துக்கள் பெரிதும் உதவலாம்.
தொடரும்
இந்த சிந்தனைக்கு வடிவம் கொடுத்து சமூகத்தில் முன்னெடுக்க வேண்டும்
ReplyDelete