Header Ads



கப்பலில் மீண்டும் தீ பரவ வாய்ப்பு - இன்று 1000 கிலோகிராம் இரசாயன பதார்த்தம் விசிறப்பட்டது


New Diamond கப்பலை அண்மித்த பகுதியை குளிர்விப்பதற்கு இன்றும் இரசாயன பதார்த்தங்களை விசிறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பெல் 212 ரக விமானத்தின் மூலம் சுமார் 1000 கிலோகிராம் இரசாயன பதார்த்தம் விசிறப்பட்டதாக விமான படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.


தீ விபத்து ஏற்பட்ட கப்பல் தொடர்பில் கண்காணிப்பதற்காக இலங்கை விமானப் படையின் விமானமொன்று இன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


நேற்றிரவு பலத்த காற்று வீசிய சந்தர்ப்பத்தில், கப்பலிலிருந்து புகை வௌியேறுதாக கடற்படை தமக்கு அறிவித்ததாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க கூறினார்.


இதனை தொடர்ந்து பெல் 212 ரக விமானத்தின் மூலம் சுமார் 1000 கிலோகிராம் இரசாயன பதார்த்தம் விசிறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


கப்பலில் அதிக வெப்பத்துடன் காணப்படும் இரும்பிலான பொருட்களின் வெப்பத்தை தணிப்பதற்கு இந்த நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என விமானப்படை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.


குவைத்தின் மீனா அல் அகமதி துறைமுகத்திலிருந்து இந்தியாவின் பராதீப் துறைமுகம் (Paradip Port) வரை நோக்கிப் பயணித்த கப்பலில் கடந்த வியாழக்கிழமை தீ பரவியது.


தீ பரவியபோது குறித்த கப்பல் சங்கமன்கண்டி கரையிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் பயணித்தது.


பனாமா நாட்டின் தேசியக்கொடியுடன் மசகு எண்ணெய் 270,000 லீற்றர் மெற்றிக் தொன் மற்றும் 1700 மெற்றிக் தொன் டீசலுடன் குறித்த கப்பல் பயணித்தது.


இலங்கையை அண்மித்த கடற்பகுதியில், New Diamond கப்பலில் பரவிய தீ நேற்று பிற்பகல் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.


எனினும் கப்பலில் மீண்டும் தீ பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கடற்படைத் தளபதி கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.