Header Ads



கன்னி அமர்வில் கலந்து கொள்ள முடியாத 2 தேசியப் பட்டியல் உறுப்பினர்கள்


(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சி, அபே ஜனபல வேகய  கட்சி ஆகிய கட்சிகளின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் இல்லாமல்   20ஆம் திகதி வியாழக்கிழமை முதலாவது பாராளுமன்ற அமர்வு   கூடவுள்ளது.  அபேஜன பல வேகய கட்சியின் தேசிய பட்டியல் விவகார முரண்பாட்டுக்கு  நாளை  அல்லது  நாளை மறுதினம் தேசிய தேர்தல்கள்   ஆணைக்குழு தீர்மானம் வழங்கும்   என எதிர்பார்க்கப்படவுள்ளது.

     இடம்பெற்று முடிந்த பொதுத்தேர்தலின் பெறுபேறுகளை தொடர்ந்து  ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியடைந்துள்ள நிலையில் அக்கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது.   தேசிய  பட்டியல்  ஆசனத்தை  யாருக்கு வழங்குவது என்ற  கருத்து முரண்பாட்டுக்கு இதுவரையில் ஐக்கிய தேசிய கட்சி ஒரு தீர்வினை முன்வைக்கவில்லை.

 அபேஜன  பல வேகய  கட்சி   17  தேர்தல் மாவட்டங்களில் போட்டியிட்டு 67 ஆயிரம் வாக்குகளைபெற்றுக் கொண்டது.   இக்கட்சிக்கு தேசிய பட்டியில் ஒரு  ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து அக்கட்சியில்  போட்டியிட்ட பொதுஜன பல சேனா  அமைப்பின் பொதுச்செயலாளர்  ஞானசார தேரர்,   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்தரலியே ரத்ன தேரர் மற்றும்   அபேஜன  பல வேகய கட்சியின் பொதுச்செயலாளர் வேதிரிகள விமலதிஸ்ஸ  தேரர் ஆகியோர் முரண்பட்டுக்   கொண்டமை பல்வேறு  சந்தர்ப்பங்களின் ஊடாக  வெளியானது.

  கிடைக்கப் பெற்ற 1 ஆசனத்துக்கு ஞானசார தேரர் மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோருக்கு இடையில் முரண்பாடு காணப்படுகிறது. ஆகையால் தனக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை  வழங்குமாறு     அபேஜன பலவேகய கட்சியின்  பொதுச்செயலாளர்   வேதிரிகம விமல  திஸ்ஸ  தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவித்து தலைமறைவானார்.

 அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா  இவ்விடயம் ஆராய்ந்து  கட்சியின் செயற்குழுவில்  ஞானசார தேரருக்கு    தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்குமாறு  குறிப்பிட்டு அனுமதி பெற்றுக் கொண்டு  அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தார்.  பின்னர்  வேதிரிகம விமலதிஸ்ஸ தேரரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி   புதிய  பொதுச்செயலாளர் ஒருவரை  நியமித்தார்.

ஞானசார தேரர்,  அத்துரலியே ரத்ன தேரர் உட்பட பலர் அபேஜன  பல வேகய  கட்சியில் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார்கள்.  இந்த  கூட்டணியில் பொதுச்செயலாளராக  தான்  நியமிக்கப்பட்டதாக   அத்துரலியே ரத்ன தேரர் குறிப்பிட்டுக் கொண்டு தானே தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் தீர்மானிப்பதாக  குறிப்பிட்டார்.

கிடைக்கப்பெற்ற ஒரு தேசிய பட்டியல்  ஆசனத்திற்கு மூன்று  தரப்பிலும் எழுந்த முரண்பாடுகளினால்  அதிருப்தியடைந்த  அபேஜன பல  கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள்.  ஞானசார தேரர், அத்துரலியே ரத்ன தேரர் மற்றும் வேதிரிகம விமலதிஸ்ஸ தேரர் ஆகியோருக்கு விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு.  யக்கல, வீரகல  அநுராதபுரம் ஆகிய பிரதேச பொலிஸ்  நிலையங்களில்  முறைப்பாடு செய்துள்ளார்கள்.

 தேசிய பட்டியல் விவகாரத்தில் அபேஜன பலவேகய கட்சியில் எழுந்துள்ள முரண்பாடு மற்றும்  காணப்படும் சட்ட சிக்கல்களுக்கான தீர்வு தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு  சட்டமாதிபர்  திணைக்களத்தில் ஆலோசனை கோரியிரந்தது.  சட்டமாதிபர் திணைக்களம்  கடந்த வெள்ளிக்கிழமை தேசிய  பட்டியல்  தொடர்பில் ஆணைக்குழுவிற்கு   ஆலோசனை வழங்கியுள்ளது.   இவ்விடயம்  தொடர்பில் ஆணைக்குழு நாளை  அல்லது நாளைமறுதினம் கூடி  இறுதி தீர்மானத்தை அறிவிக்கும்.

   ஐக்கிய தேசிய கட்சி,  அபே ஜனபல வேகய கட்சிகளின்   இரு தேசிய பட்டியல் உறுப்பினர்கள் இல்லாமல்  9வது பாராளுமன்றத்தின் முதலாவது   அமர்வு  நாளை   மறுதினம் கூடவுள்ளது.  223  உறுப்பினர்களும்  அன்றைய தினம்  பாராளுமன்ற உறுப்பினராக  சத்தியபிரமானம் செய்துக் கொள்வார்கள்.

No comments

Powered by Blogger.