Header Ads



முகக்கவசம் அணிந்தோருக்கு மாத்திரம் பஸ்களில் அனுமதி


ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பஸ்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல முடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பஸ்களில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமானதென ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வகையில் செயற்படும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முகக்கவசம் அணிந்து வருவோரை மாத்திரம் அனுமதிக்குமாறும் நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் ஆகியோரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், அனைத்து பஸ் நிலையங்களிலும் 24 மணித்தியாலங்களிலும் கிருமித்தொற்று ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பஸ் போக்குவரத்தில் ஈடுபடுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடமும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பஸ்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய பொதுமக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.