Header Ads



சுகாதார பழக்கங்களை பின்பற்றி, அரசாங்கத்திற்கு உதவுங்கள் - பிரதமர் கோரிக்கை


கொரோனா வைரஸ் தொற்று நோயை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்திற்கு உதவுவதற்காக அனைவரும் கட்டாயம் சுகாதார பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

களுத்துறை மில்லனிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சிலர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கொரோனா வைரஸ் தொற்று நோய் சம்பந்தமாக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், மக்கள் இது சம்பந்தமாக அவதானத்துடன் இருக்க வேண்டும்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயை அரசாங்கம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது. எதிர்காலத்திலும் அரசாங்கம் இது தொடர்பாக அவதானத்துடன் இருந்து, தொற்று நோயை கட்டுப்படுத்த அனைத்து பலத்தையும் பயன்படுத்தும்.

தொற்று நோய் முடிவுக்கு வந்து விட்டது என்று கருதாமல், அனைவரும் கவனமாக சுகாதார பழக்கங்களை சரியாக பின்பற்ற வேண்டியுள்ளது. இப்படியான நிலைமையில் கூட நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் மாத்திரமே முன்னெடுக்க முடியும் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு அணிகளாக பிளவுப்பட்டுள்ளதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதியானது என்பதை காணக் கூடியதாக உள்ளது. எப்படியான தடைகள் வந்தாலும் நாட்டை இலக்கு நோக்கிய அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் காலத்தில் நடந்தது போல் அரசியல் பழிவாங்கல்கள் எதிர்காலத்தில் நடைபெறாது. எனினும் தகுதி தராதரமின்றி குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.