இராணுவத்தளபதி விடுத்துள்ள, உருக்கமான வேண்டுகோள்
(எம்.மனோசித்ரா)
நாட்டில் அடுத்து வரும் சில தினங்கள் மிகவும் முக்கியத்துவம் உடையவை என்பதால் தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு பொது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.
வெளியிடங்களுக்குச் செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்வதோடு இயன்றவரை சமூக இடைவெளியைப் பேண வேண்டும் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
தலதா மாளிகையில் வருடாந்தம் நடைபெறும் பெரஹர உற்சவத்தில் இராணுவத்தின் சார்பில் மத வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காக இன்று புதன்கிழமை கண்டிக்குச் சென்றிருந்த போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
எதிர்வரும் சில தினங்கள் மிகவும் முக்கியத்துவம் உடையவை. எந்த அலை வந்தாலும் அது சமூகத்தினுள்ளேயே வர வேண்டும். மார்ச் மாதம் 10 ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை பெரும் அர்ப்பணிப்புடன் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றியதன் காரணமாகவே வைரஸ் பரவலை ஓரளவு கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் சேவையாற்றியவர்களும் அங்கு தொற்றுக்குள்ளானவர்கள் உள்ளனர் என்பதை அறிந்திருக்கவில்லை. அறியாமையின் காரணமாக அவர்கள் சில இடங்களுக்குச் சென்றுள்ளனர். எனவே பொது மக்கள் நிலைமையை அறிந்து செயற்பட வேண்டும்.
வீடுகளிலிருந்து வெளியில் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசங்கள் அணிவது செல்ல வேண்டும். அத்தோடு கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருப்பதோடு இயன்றளவு சமூக இடைவெளியைப் பேண வேண்டும். இவற்றைப் பின்பற்றும் போது வைரஸ் பரவல் தீவிரமடைவதை எம்மால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். எவ்வாறிருப்பினும் ஒவ்வொரு பிரஜைகளும் தாம் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாதவராக இருக்க வேண்டும் என்ற பொறுப்பில் கவனமாக இருக்க வேண்டும்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் திங்கட்கிழமை விஷேட கலந்துரையாடல் நடைபெற்றது. இவ்வாறான சூழலில் உண்மைகள் மறைக்கப்படுவதாகக் கூற முடியாது. அவர்கள் முப்படையினர் , பொலிஸார் , சுகாதாரத்துறையிளர் உள்ளிட்டோரைப் பயன்படுத்தி கொரோனாவை நாட்டில் முழுமையாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றார்.
Post a Comment