Header Ads



கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முறையான திட்டங்கள், எமது ஆட்சியில் முன்னெடுக்கப்படும் - ரணில்

(செ.தேன்மொழி)

பொருளாதார நெருக்கடி , மிலேனியம் சவால் (எம்.சி.சி.) ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைகளுக்கு மாத்திரமின்றி இரண்டாவது அலை மூலம் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான திட்டங்களும் தமது ஆட்சியில் முன்னெடுக்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துடன் கூட்டணி அமைத்துக்கொண்டுள்ளதாக போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

நாம் நாட்டு மக்களுடன் மாத்திரமே ஒப்பந்தம் செய்து கொள்வோம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஐ.தே.க.வினால் மாத்திரமே தீர்விரைன பெற்றுக் கொடுக்க முடியும் என்பதால் தமக்கு ஆட்சி அதிகாரத்தை மக்கள் வழங்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கட்சி தலைமையமான சிறிகொத்தாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

சூம் , லிங்ட்இன் போன்ற நவீன தொழிநுடப்பமுறைகளை பயன்படுத்தி இடம்பெற்ற இந்த கூட்டத்தில் உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த விக்கிரமசிங்க மேலும் கூறுகையில்,

பாதிப்படைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக அரசாங்கத்திடம் எவ்வாறான திட்டம் காணப்படுகின்றது? பணத்தை அச்சிடுவதால் பொருளாதார சிக்கலுக்கு தீர்வுக்காண முடியாது. 

பாதிக்கடைந்துள்ள ஏற்றுமதி பொருளாதார துறை , சுற்றுலாத்துறை , சிறுவர்த்தகம் மற்றும் ஆடை தொழிற்சாலைகளை பாதுகாப்பதுடன் , மீண்டும் கட்டியெழுப்ப முறையான திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும். அதற்காக அரசாங்கத்திடம் உள்ள திட்டமென்ன ? ஐ.தே.க.விடம் சிறந்த திட்டங்கள் காணப்படுகின்றன. அதனை எதிர்வரும் காலங்களில் செயற்படுத்தி காட்டுவோம்.

தற்போது ஜனநாயகத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எமது அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை நீக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அரச ஊழியர்களும் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். இவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். இன்றைய கால இளைஞர்களுக்கு அரசியல் என்பது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்படுவதில் இளம் தலைமுறையினர் விருப்பமின்றி இருக்கின்றனர். ஆனால் விருப்பமில்லை என்பதற்காக சர்வாதிகார ஆட்சிக்கு நாம் இடமளிக்க கூடாது.

ஏனையவர்களை போன்று கட்சி தலைமையகத்திற்கு கல்லெறியாது, ஆட்சியை கைப்பற்றி நாடு எதிர்நோக்கி வருகின்ற பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதுடன் , மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்திற்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதே எமது எண்ணம். அதனால் எமக்கான பலத்தை பெற்றுக்கொடுக்குமாறு நாங்கள் மக்களிடம் கோரிக்கை முன்வைக்கின்றோம் என்றார்.

No comments

Powered by Blogger.