Header Ads



சர்வதேச விமானச் சேவையைத் தொடங்கியது துருக்கி


துருக்கியில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், இம்மாதத்தில் 40 நாடுகளுக்கு விமானச் சேவையைத் தொடர முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 15 நாடுகளிடம் இருதரப்பு விமானச் சேவை மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் பல நாடுகள் அதன் எல்லைகளை மூடின. நாடுகளுக்கு இடையேயான விமானச் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கரோனா தொற்று தொடர்ந்து நீடித்து வந்தாலும், பொருளாதாரச் சூழலைக் கருத்தில்கொண்டு பல நாடுகள் அதன் எல்லைகளைத் திறந்து வருகின்றன.

அந்த வகையில் துருக்கி ஜூன் மாதத்தில் 40 நாடுகளுக்கு விமானச் சேவையைத் தொடங்க உள்ளது. முதற்கட்டமாக இத்தாலி, சூடான், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம், அல்பேனியா, ஜோர்டன், மொராக்கோ உள்ளிட்ட 15 நாடுகளிடையே இருதரப்பு விமானச் சேவைக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

துருக்கியில் கடந்த திங்கள் கிழமை உள்நாட்டு விமானச் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் இம்மாதத்தில் வெளிநாடுகளுக்கு இடையேயான விமானச் சேவையை ஐந்து கட்டமாக தொடங்க இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆதில் கரைஸ்மெயிலோக்லு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''கரோனா பரவலின் முக்கியக் கட்டத்தைக் கடந்துவிட்டோம். இனி உலக வர்த்தக உறவை, வணிகத்தைத் தொடர வேண்டும். தற்சமயம் 92 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

துருக்கியில் ஜூன் 10 அன்று வடக்கு சைப்ரஸ், பஹ்ரைன், பல்கேரியா, கத்தார், கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு விமானச் சேவை தொடங்கப்படும். அதைத் தொடர்ந்து ஜூன் 15 அன்று ஜெர்மனி, ஆஸ்திரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 17 நாடுகளுக்கும், ஜூன் 20, 22, 25 ஆகிய தேதிகளில் தென்கொரியா, நெதர்லாந்து, நார்வே, பெல்ஜியம் உள்ளிட்ட 16 நாடுகளுக்கும் விமானச் சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் இதுவரை 1.65 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,609 பேர் பலியாகியுள்ளனர்.

No comments

Powered by Blogger.