Header Ads



எனது மகள் நாட்டிற்கு துரோகம் இழைத்துவிட்டார் - தற்கொலைதாரியின் தாயார் சாட்சியம்


எனது மகள் நாட்டிற்கு துரோகமிழைத்துவிட்டார் என தெமட்டகொட மகாவில கார்டனில் தன்னை வெடிக்கவைத்து உயிரிழந்த பெண் தற்கொலைதாரியான பாத்திமா ஜிவ்ரியின் தாயார் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பில விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தனது மகளிற்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர், உயிரிழந்தவேளை அவர் கர்ப்பிணி எனவும் தாயார் தெரிவித்துள்ளார்.

சங்கிரி-லா- ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரி இல்ஹாம் அகமட்டினை எனது மகள் எப்போது மணமுடித்தார் என்பது எனக்கு நினைவில்லை என தெரிவித்துள்ள தாயார்ஆறு வருடங்களிற்கு முன்னர் திருமணம் செய்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற அன்று அவரது மகள் எவ்வாறு நடந்துகொண்டார் என்ற கேள்விக்கு மகள் அன்று காலை என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு உடனடியாக வீட்டிற்கு வருமாறு அழைத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

நான் உடனடியாக வீட்டிற்கு சென்றேன், அவரிடம் என்ன நடந்தது என கேட்டேன் அதற்கு அன்று தனது கணவர் வீட்டிற்கு வந்து பிள்ளைகளை கட்டியணைத்து அழுதார் என தெரிவித்தார் என பாத்திமா ஜிவ்ரியின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் அவரை கையடக்க தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை என மகள் கவலை கொண்டிருந்தார் எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளை மகள் மிகவும் கவலையாக காணப்பட்டார் தனது பிள்ளைகளை பார்த்துக்கொள்ளும்படி என்னை கேட்டுக்கொண்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் குழந்தைகளிற்கு இனிப்பு வழங்கினேன் மகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தார், தனக்கு தலை சுற்றுகின்றது என தெரிவித்தார் நான் அவரிற்கு பழங்களை வழங்கினேன்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திடீரென எனது உறவினர் ஒருவர் என்னை கீழே வருமாறு அழைத்தார் நான் கீழே உள்ள அறைக்கு அனைவரும் கவலையுடன் காணப்பட்டனர், நான் ஏன என கேட்டேன் அவ்வேளை எங்களின் உறவினர் ஒருவர் பென்டிரைவை கணிணியில் செலுத்தி எதனையோ எங்களை கேட்கச்செய்ய முயன்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பத்து நிமிடங்களிற்குள் பொலிஸார் வீட்டிற்கு வந்தனர், அவர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர், பொலிஸார் சோதனை நடவடிக்கையை ஆரம்பித்து ஐந்து நிமிடங்களில் எனது மகளும் குழந்தைகளும் காணப்பட்ட முதலாம் மாடியிலிருந்து பாரிய வெடிப்பு சத்தம் கேட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.