Header Ads



சீயோன் தேவாலய தாக்குதல் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள்

உயிர்த்த ஞாயிற்று தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தாக்குதலை நடத்தியவர் தாக்குதல் நடத்தப்பட்ட நாளுக்கு முதல் நாள் இரவு மட்டக்களப்புக்கு பயணிகள் பேருந்திலேயே குண்டை மட்டக்களப்புக்கு எடுத்துச் சென்றதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (04) தெரியவந்தது. 

சியோன் தேவாலயத்தின் மீது குண்டு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆரம்பமானது. 

அதற்கமைய இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை ஊடகங்களுக்கு வெளியிடப்படாத சி.சி.டி.வி காட்சிகளை ஜனாதிபதி ஆணைக்குழு இன்று பகிரங்கப்படுத்தியது. 

தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு பொறுப்பாக இருந்த குற்ற புலனாய்வு பிரிவின் தலைமை பொலிஸ் பரிசோதகர் சமன் வீரசிங்க சீயோன் தேவாலய தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை முன்வைத்து ஆணைக்குழுவில் சாட்சி வழங்கினார். 

இதன் போது சாட்சியம் அளித்த அவர் சீயோன் தேவாலயத்திற்கு அருகில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது தாக்குதலை நடத்தியவர் மொஹமட் நாசர் மொஹமட் ஆசாத் என அடையாளம் காணப்பட்டதாக கூறினார். 

தாக்குதல்தாரி 2005, 2012 ஆம் ஆண்டுகளில் கட்டாரில் வசித்த பின் நாடு திரும்பியவர் என அவர் சாட்சியமளித்தார். 

மொஹமட் ஆசாத் 2012 இல் அப்துல் ரஹீம் ஃபெரோசாவை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த பெண் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு சாய்ந்த மருதில் உள்ள ஒரு வீட்டில் இடம்பெற்ற வெடி சம்பவத்தில் உயிரிழந்தாகவும் அவர் சாட்சியமளித்தார். 

தனது மகனின் புகைப்படங்களை எரித்ததற்கான ஆதாரங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைதான தாக்குதல் நடத்தியவரின் தாய் இப்போது குற்றப் புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

அத்துடன் சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவரும் அவரது மனைவியும் தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அதாவது 2019 ஏப்ரல் 18 ஆம் திகதி இரவு கல்முனையில் இருந்து வேனில் கொழும்பை வந்தடைந்ததாகக் சாட்சியாளர் கூறினார். 

அவர்கள் கொள்ளுப்பிட்டி லகி பிளாசா தொடர் மாடி வீட்டு தொகுதியில் தங்கியிருந்த சஹரான் ஹாசிம் அவரது மனைவி மற்றும் பிள்ளை ஆகியோரை கடுவாபிட்டி தேவாலயத்தில் குண்டு தாக்குதல் நடத்திய மொஹமட் ஹஸ்தூன் மற்றும் அவரின் மனைவி சாரா ஜஸ்மின் அல்லது புலஸ்தினி ஆகியோர் சந்தித்ததாக சாட்சியாளர் கூறினார். 

பின்னர், ஏப்ரல் 20 ஆம் திகதி மதியம், மொஹமட் ஆசாத்தின் வேன் சஹாரான் ஹாஷசிமின் சகோதரர் ரில்வான் தங்கியிருந்த பாணந்துரையில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தாக அவர் கூறினார். 

சீயோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய மொஹமட் அஹமது ஆசாத், தாக்குதலுக்கு முந்தைய நாள் இரவு 8.52 மணியளவில் மருதானை சாஹிரா கல்லூரி அருகே கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி சென்ற பஸ்ஸில் ஏறியதாகவும் சாட்சியாளர் கூறினார்.

தாக்குதல் நடத்தியவரின் முதுகில் ஒரு பை மற்றும் கைகளில் மற்றொரு பை இருந்ததை சிசிடிவி காட்சிகள் தெளிவாகக் காட்டுவதாகவும் அவர் தெரிpத்தார். 

அந்த பெரிய பையை அவர் பேருந்தின் அடிப்பகுதியில் வைத்ததாக பஸ் ஓட்டுனர் கூறியதாக சாட்சியாளர் கூறினார். 

கொச்சிக்கடை தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய அலாவூதின் மெஹமட் என்பவரே அவருக்கு பஸ்ஸின் இருக்கையை முன்பதிவு செய்தாகவும் சாட்சியாளர் கூறினார். 

ஏப்ரல் 21 ஆம் திகதி அதிகாலை 2.16 அளவில் குண்டுதாரி பஸ்ஸிலிருந்து இறங்கி ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு சென்றதாக சிசிடிவி காட்சிகள் புலப்படுத்துவதாகவும் சாட்சியாளர் தெரிவித்தார். 

குண்டுதாரி அதிகாலை 4.39 மணி வரை பள்ளிவாசலுக்கு முன்னால் காத்திருந்தாகவும் அவர் கொண்டுவந்த பொருட்கள் அனைத்தும் அவருக்கு அருகில் தரையில் கிடந்தாகவும் ஆனால் அந்த வழியாக சென்ற பொலிஸ் மொபையில் கண்காணிப்பு வாகனங்கள் அதனை கண்டுகொள்ளவில்லை என அவர் ஆணைக்குழுவில் விளக்கமளித்தார். 

அதிகாலை 4.39 அளவில் பள்ளிவாசல் திறக்கப்பட்டதாகவும், அப்போது குண்டுதாரி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து பல மணி நேரம் அமைதியின்றி நடந்து கொண்டதாகவும் பிரதான பொலிஸ் பரிசோதகர் கூறினார். 

காலை 8.32 அளவில், குண்டுதாரி சிவப்பு நிற டி-சேட் அணிந்து ஒரு பையுடனும், கையில் ஒரு பையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டதாக சாட்சியாளர் ஆணைக்குழுவில் தெரிவித்தார். 

அவ்வாறு வந்தவர் காலை 9.03 அளவில் சியோன் தேவாலயத்தில் குண்டை வெடிக்கச் செய்தாகவும் பொலிஸ் பரிசோதகர் சமன் வீரசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டினார். 

தாக்குதல் நடந்த இடத்தில் குண்டு தாரியின் கையடக்க தொலைப்பேசி கண்டுபிடிக்கப்பட்டதாக கூறிய அவர் அதற்கு பயன்படுத்தப்பட்ட சிம் மற்றொரு நபரின் பெயரில் இருப்பதும் விசாரணைகளில் தெரியவந்தாக கூறினார்.

https://www.youtube.com/watch?time_continue=5&v=6jLrxdg4KUY&feature=emb_logo

No comments

Powered by Blogger.