Header Ads



100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீள கடத்தல்காரர்களுக்கு விற்பனை - வெளியாகும் புதிய தகவல்கள்

( எம்.எப்.எம்.பஸீர்)

போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து, கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்களுக்கே மீள விற்பனை செய்ததாக கூறப்பட்ட விடயத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் 4 அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு கடந்த 2017 மே 9 ஆம் திகதி, பிலியந்தலை பகுதியில் போதைப்பொருள்  சுற்றிவலைப்புக்கு சென்ற பொலிஸ் பரிசோதகர் ரன்க ஜீவ தலைமையிலான குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்திய சம்பவத்துடன் ஏதும் தொடர்புகள் உள்ளதா என சி.ஐ.டி. தீவிரமாக விசாரித்து வருகின்றது.  

அந்த சம்பவத்தை மையப்படுத்தி  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த சி.ஐ.டி.யினர்,  தற்போது கைதாகியுள்ள  போதைப் பொருள்  தடுப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்களைக்  கொண்ட கும்பலுக்கும், பிலியந்தலையில்  2017  இல் நடாத்தப்பட்ட தாக்குதலின் பின்னால் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பாதாள உலக தலைவனான மாகந்துர மதூஷின் போதைப் பொருள்  வலையமைப்புக்கும்  இடையே  தொடர்புகள் இருப்பது தெரியவந்துள்ள நிலையிலேயே, குறித்த கொலை, கொலை முயற்சி சம்பவங்களுடன்  ஏதும் தொடர்புகள் கைதாகியுள்ள பொலிஸாருக்கும் இருக்கின்றனவா என விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

 ஏற்கனவே, சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விஷேட விசாரணைகளின் போது போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவியமை ஊடாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின்  நான்கு உத்தியோகத்தர்களும் சம்பாதித்திருந்ததாக நம்பப்படும்  31.1 மில்லியன் ரூபா   மீட்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அந்த நால்வர் கொண்ட பொலிஸ் குழுவுக்கு தலைமை வகித்ததாக  நம்பப்படும் உப பொலிஸ் பரிசோதகரின் மினுவனக்கொடை வீட்டு சி.ஐ.டி.யினரால் சுற்றிவலைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டுள்ளது.

 இதன்போது அவ்வீட்டிலிருந்து  போதைப் பொருள் சார்ந்து சம்பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் 9 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படும்  கார் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்று,  கூரிய ஆயுதம் ஒன்று மற்றும் 4 கடனட்டைகள் ஆகியனவும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன. இவற்றுக்கு மேலதிகமாக செய்மதி தொலைபேசி ஒன்றும், ஜீ.பீ.எஸ். தொழில்நுட்பக் கருவி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.  இந்நிலையில்  கைப்பற்றப்பட்ட பொருட்களும் சி.ஐ.டி. தலைமையகத்துக்கு எடுத்து வரப்பட்டு, மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தென் மாகாணத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் சுமார் நூறு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள்  மீள போதைப்பொருள் வர்த்தகர் ஒருவருக்கே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கடந்தவாரம் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. இந்நிலையில் இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கமைய சி.ஐ.டி.விசாரணைகளை ஆரம்பித்தது.

சி.ஐ.டி.பிரதானி பிரதி பொலிஸ் மா அதிபர் நுவன் மெதிசிங்கவின் கீழ் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸின் ஆலோசனைக்கமைய விசாரணை செய்யும் பொறுப்பு சி.ஐ.டி.யின் விசேட விசாரணை பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவாவிடம் கையளிக்கப்பட்டது. அந்த விசாரணைகளிலேயே தற்போது நான்கு பொலிஸ் போதைப் பொருள்பிரிவு உத்தியோகத்தர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தடுப்பு காவலில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கடந்த இரு வருடங்களுக்கு முதல் மினுவங்கொட பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரொஹான் மஹேஸ் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்த நடவடிக்கையொன்றின் போது  ஐந்து கிராம் ஹெரோயினுடன் எடையில் சமிந்த எனப்படும் சமிந்த தயா பிரியான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளின் போது ரிபிட்டர் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டதுடன், திவுலப்பிட்டிய பகுதி தனியார் வங்கியொன்றினூடாக இலட்சக்கணக்கான பணம் பரிமாற்றப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தற்போது சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சுற்றிவளைப்பு பிரிவு குழுவொன்றின் பிரதாணி விசாரணை என்ற பெயரில் டையில் சமிந்தவை சந்திக்க மினுவங்கொடை பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார். இதன்போது 'உனக்கு 100 கிலோ ஹெரோயின் வெள்ளை நிற வேன்  ஒன்றில் வந்துள்ளததே. அந்த பொருள் எங்கே? 'என டையில் சமிந்தவிடம் விசாரித்துள்ளார். இதன்போது டையில் சமிந்த ஆச்சரியத்துடன் 'அன்று சேரின் குழுவினர்தானே பொருட்களை கொண்டு வந்தீர்கள்' என தெரிவித்துள்ளார். அந்த கேள்வியை எதிர்பாராத குறித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்யாது பொலிஸார் இரு நாட்கள் தடுத்து வைத்துள்ளதாக பதிவொன்றினையிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மற்றொரு பொலிஸ் குழு மினுவங்கொட பொலிஸ் நிலையத்துக்குச் சென்று டையில் சமிந்தவுடன் விசாரணைகள் நடத்தியுள்ளது. இதன்போது டையில் சமிந்தவின் தொலைபேசியை கையேற்று நடாத்திய விசாரணைகளில் நீர் கொழும்பு பகுதியில் வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 6 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் முன்னெடுத்த விசாரணையில் அவரது சகோதரரின் வீடொன்றில் பாரிய தொகை போதைப்பொருள் இருப்பதாக தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வீட்டை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு குழு சுற்றிவளைத்த போது அங்கிருந்த போதைப் பொருளை வேன் ஒன்றில் வந்த மூவர் எடுத்துச் சென்றதாக அவ்வீட்டிலிருந்தவர்கள் கூறியுள்ளனர். பின்னர் சி.சி.ரி.வி. காணொளிகள் பிரகாரம் வேனின் இலக்கத்தை அடையாளம் கண்டு விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த லெகன் ஆர் ரக வேனானது வத்தளை பகுதியில் உள்ள வாடகைக்கு வாகனங்களை கையளிக்கும் நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. அங்கு சென்று விசாரணை செய்த போது அந்த வேனானது ஒரு இலட்சம் ரூபா மாத வாடகை அடிப்படையில், முதலில் மினுவங்கொட பொலிஸ் நிலையத்துக்கு டையில் சமிந்தவை சந்திக்கச் சென்ற போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சுற்றிவளைப்பு பிரிவொன்றின் பிரதாணியால் பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு முன்னெடுத்த விசாரணைகளில் தற்போது டுபாயிலுள்ள போதைப் பொருள் வர்த்தகரான கிஹான் பொன்சேகா எனும் (சி.ஐ.டி. பொறுப்பிலுள்ள மாக்கந்துரே மதுஷின் சகா ) நபருக்கும், போதைப் பொருள் தடுப்பு பிரிவின் ஒரு குழுவால் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் போதைப் பொருளுக்கும் தொடர்புள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவின் குழு டையில் சமிந்தவுக்கு ஒரு தொகை போதைப் பொருளை கிஹான் பொன்சேக்காவின் ஆலோசனைக்கமைய பொல்வத்தை பகுதியில் வைத்து கையளித்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி இந்த தகவல்களை மையப்படுத்தி இது குறித்த ஆழமான விசாரணைகளை முன்னெடுக்க சி.ஐ.டி.க்கு உத்தரவிடுமாறு போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பிரதாணி பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ மெதவத்த பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதன்படியே சி.ஐ.டி.யும் தேசிய உளவுத்துறையும் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்தன. விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கமைய நேற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா  தலைமையிலான சி.ஐ.டி குழு 4 போதைப் பொருள் தடுப்பு பிரிவினரையும், ஒரு சிவில் நபரையும் கைது செய்தது. அவர்களை தடுப்பு காவலில் வைத்து குறித்த சி.ஐ.டி விசாரணை குழு தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.