Header Ads



தேர்தலின் பின் நாடு பாரிய சவால்களை எதிர்கொள்ளும் - ரணில் எச்சரிக்கை

(லியோ நிரோஷ தர்ஷன்)

சுகாதார துறையினரின் உத்தரவாதமின்றி பொதுத் தேர்தலையோ, நாட்டின் ஏனைய நடவடிக்கைகளையோ முழுமையாக முன்னெடுக்க முடியாது.

இந்நிலையில் நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து முதலீட்டாளர்கள் அச்சப்படும் வகையில்  ஜனாதிபதியின் செயலாளர் வெளிப்படையாக அறிவித்தமை தவறாகும் என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க , ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளித்துக்கொள்ள சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கம் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் முன்னாள்அமைச்சர்கள் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பொதுத்தேர்தல் குறித்த கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டனர்.

இந்த கலந்துரையாடல் கொழும்பு- 7,5 ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டில் இடம்பெற்றது. இதன் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில் , 

பல பிரச்சிணைகள் ஏற்பட்டுள்ளன. கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் குறைந்துள்ளதாக சுகாதார துறை உத்தரவாதம் இன்னும் அளிக்க வில்லை. 

ஊரடங்கு சட்டம்  தனிமைப்படுத்தல்  சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனவே புதிய சட்டங்கள்  உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு அல்லாது இந்த பிரச்சினையிலிருந்து மீள இயலாது .

கொவிட் - 19 வைரஸின் பின்னர் புதியதொரு சூழலே உருவாக போகிறது. அதற்கு ஏற்றவாறு எமது  சட்டத்திட்டங்களும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் ஜுன் மாதத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது என்பது சாத்தியமற்ற விடயமாகும். அதே நிலைப்பாட்டில் தான் ஜனாதிபதியும் உள்ளார் என்றே அறிகிறேன். பெரும்பாலும் ஆகஸ்ட் மாதத்தில் தேர்தலை நடத்த கூடிய வாய்ப்புகளே அதிகம் உள்ளன. சுகாதார துறை உத்தரவாதம் அளிக்காமல் தேர்தல் ஆணைக்குழுவினால் திகதியை தீர்மானிக்க இயலாது . 

எவ்வாறாயினும் அரசாங்கத்திடம் தற்போது நிதி பற்றாக்குறை உள்ளது. அரச ஊழியர்களின் விருப்பமின்றி சம்பளத்தின் ஒரு பகுதியை பெற்றுக்கொள்ளவும் முடியாது. ஆனால் நெருக்கடியை சமாளித்துக் கொள்ள அரச ஊழியர்களின் மாத சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை பெற்றுக்கொள்ளவே முயற்சித்தது.

அந்த முயற்சி சாத்தியப்பட்டிருந்தால் மே மாத சம்பளத்தை வழங்குவதில் அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டிருக்காது. பாரியதொரு அரசியல் நெருக்கடியில் தான் நாடு உள்ளது.

எதிர்காலத்தில் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம். நாட்டில் பொருளாதார நெருக்கடி உள்ளதென்பதை ஜனாதிபதி செயலாளர் வெளிப்படையாக அறிவித்தது தவறு. ஏனெனில் முதலீட்டாளர்கள் அச்சமடைந்து பின்வாங்கி விடுவார்கள். 

பங்கு சந்தை நடவடிக்கைளை தொடர்ந்தும் முன்னெடுத்திருக்க வேண்டும். உரியதொரு திட்டமில்லையென்றால் பொதுத் தேர்தலின் பின்னரான நிலைமை மிகவும் மோசமானதாகவே அமையும். சர்வதேச நாணய நிதியத்திடமும் கடன் பெற கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. 

இராணுவ அதிகாரிகளை செயலாளர்களாக நியமிப்பது அரச நிர்வாக துறையில் பாரிய நெருக்கடியை தோற்றுவிக்கும். சுகாதார அமைச்சின் செயலாளரில் பிரச்சிணை இருந்திருந்தால் அதற்கு பதிலாக மற்றுமொரு சிவில் நிர்வாக துறை அதிகாரியை நியமித்திருக்க வேண்டும்.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரியின் தகமை குறித்து எமக்கு சிக்கல் இல்லை. ஆனால் அவர் இராணுவ அதிகாரியாகவே செயற்படுவார். இது பிரச்சிணையை தோற்றுவிக்கும் .

No comments

Powered by Blogger.