Header Ads



தேர்தல் செப்டெம்பரில் நடக்குமா..? ஹூல் மீதான அழுத்தத்திற்கு ஆணைக்குழு அறிக்கை வெளியிடும்

(ஆர்.யசி)

எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதில் எந்தவித சாத்தியமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்த மேலும் 70 நாட்கள் தேவைப்படுவதாகவும் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் இது குறித்து வெளிப்படையாக  அறியத்தருவதாகவும் இன்று தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இடையிலான சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மீதான அழுத்தங்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிடவும் தீர்மானித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான திகதியை ஒத்திவைக்க வேண்டிய கோரிக்கையில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றுகாலை தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இன்றைய தினம் நீதிமன்றத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் முன்வைக்கப்பட்ட காரணிகள் குறித்தும் தேர்தல் திகதியின் எவ்வாறான தீர்மானங்களை முன்னெடுப்பது என்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக தேர்தல் விருப்பு இலக்கம் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதங்களை அடுத்து விருப்பு இலக்கங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் தரப்பின் யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் தற்போது நீதிமன்ற மனுத்தாக்கல் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் நீதிமன்ற தீர்ப்பு ஒன்றினை வழங்காத வரையில் விருப்பு இலக்கம் வழங்கப்பட முடியாது என்ற காரணிகளை ஆணைக்குழு கருத்தில் கொண்டு கலந்துரையாடியுள்ளது.

அத்துடன் தேர்தல் திகதியின் மாற்றம் ஏற்படும் என ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்த நிலையில் ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தல் நடத்த முடியாது என்பதை இன்றும் அவர்கள் தீர்மானித்துள்ள நிலையில் மேலும் 70 நாட்கள் தமக்கு தேவைப்படுவதாகவும், உடனடியாக தேர்தலை நடத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

ஆகவே செப்டெம்பர் மாதம் வரையில் தேர்தல் பிற்போடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரித்துள்ள நிலையில் அது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடவும், சுகாதார நிலைமைகள் குறித்து அடுத்த வாரம் சுகாதார பணிப்பாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்தும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இடையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் அரசியல் பிரமுகர்களின் கருத்துக்களுக்கு இணங்க செயற்படுகின்றார் எனவும், அவரது புதல்வி வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ள போதிலும் எந்தவித தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை எனவும், மேலும் சில காரணிகளை முன்வைத்தும் அவர் மீது புகார்கள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் அவற்றிற்கு பதில் தெரிவிக்கும் விதத்தில் ஆணைக்குழுவே அறிக்கை ஒன்றினை விடவும் தீர்மானம் எடுத்துள்ளது. 

No comments

Powered by Blogger.