Header Ads



அரச ஊழியர்களின் சம்பளத்தை கேட்குமளவு, அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது

(செ.தேன்மொழி)

உழைக்கும் மக்களின் ஊதியத்தை அரசாங்கத்திற்கு அர்பணிப்பு செய்யுமாறு கோரிக்கை விடுக்கும் அளவிற்கு அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம், கடந்த அரசாங்கங்களில் இருந்த வயோதிப குழுவை வைத்துக் கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சித்தால் அது சாத்தியமாகாது என்றும், இதற்கு சிறந்த தேர்ச்சிபெற்ற துறைசார்ந்த குழுவினர் வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

பேராசிரியர் பி.பீ.ஜயசுந்தரவின் கருத்து அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அரசாங்கம் அரச ஊழியர்களை இலக்குவைத்து அவர்களுக்கான வரப்பிரசாதங்களை நீக்கி வருகின்றது. அதற்கமைய அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்பட்டுவந்த விசேட கொடுப்பனவில் கைவைத்த அரசாங்கம், அவர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய அதிகரிப்பையும் நிறுத்தினர். தற்போது கொரோனா வைரஸை காண்பித்து அவர்களின் ஊதியத்தை இலக்கு வைத்துள்ளனர். 

இவ்வாறான நிலையில்  எதிர்க்கட்சியினர் இதற்கு எதிராக குறல் எழுப்பாமல் இருந்தால், அரசாங்கம் பலாத்காரமாக இதனை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கும்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அர்ப்பணிக்குமாறு கோரிக்கை விடுக்கும் அரசாங்கம், அவர்களின் நீர், மின்சார கட்டணங்கள் மற்றும் தொலைபேசி கட்டணங்களை செலுத்துவதற்கு காலவகாசத்தை பெற்றுக் கொடுக்குமா? நல்லாட்சி அரசாங்கத்திலே அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் விசேட கொடுப்பனவு என்பன வழங்கப்பட்டன.

11 ஆயிரத்து 730 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொண்டிருந்த காரியாலய உதவியாளர்களுக்கு 24 ஆயிரத்து 250 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்கினோம்.

தற்போது அவர்களது விசேட கொடுப்பனவுகளையும் நிறுத்திவிட்டு அவர்களது ஊதியத்தை குறிவைப்பது முறையற்ற செயலாகும். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை அடுத்த வரி சலுகையை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதாக அறிவித்திருந்தது. அதற்கமைய பெறுமதி சேர்வரி (வற்) 47 சதவீதத்தில் குறைத்திருந்தது.

ஆனால் இதன் சலுகைகளை சாதாரண மக்கள் பெற்றுக் கொண்டார்களா? அப்படியென்றால் இந்த அரசபணம் யாருக்கு கிடைக்கப்பெற்றது. ஆட்சியாளர்களின் சகாக்களுக்கே இது கிடைக்கப்பெற்றுள்ளது.

பி.பீ.ஜயசுந்தர அவரது கடிதத்தில் தனியார் துறையை மிகவும் தாழிமைப்படுத்தி குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறையினருக்கு எந்தவித நலனையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்கவில்லை.

நாட்டிலுள்ள உழைக்கும் மக்கள் தொடர்பில் 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆண்டு அறிக்கையின் படி நாட்டில் 80 இலட்சம் உழைக்கும் மக்கள் இருப்பதுடன், அவர்களுள் 60 இலட்சம் பேர் தனியார் துறையைச் சார்ந்தவர்களாவர். அவர்களுள் 47 வீதமானோர் நாளாந்த ஊதியம் பெறுபவர்கள்.

இந்த தனியார் துறையிலிருந்து மொத்த தேசிய உற்பத்திக்கு 52 சதவீதம் நிதி கிடைக்கப் பெறுவதுடன், 45 வீதமான தொழிவாய்ப்புகள் கிடைக்கின்றன என்றார்.

மேலும், அரச ஊழியர்களின் சம்பளத்தை கேட்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளினால்,  வட்டிலுள்ள தங்க நகைகள் மாத்திரமல்ல மக்களின் வஸ்த்திரங்கள் கூட பறிபோகும் நிலை ஏற்படும்.

No comments

Powered by Blogger.