Header Ads



மேல்மாகாணத்தில் ஊரடங்கால் சிக்கியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சி - இருப்பிடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு  உத்தரவால், தமது இருப்பிடங்கலுக்கு செல்ல முடியாமல்  மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்று -02- சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழிநடாத்தலில்  இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி  முதல்கட்டமாக 320 பேர் வரை இன்று சனிக்கிழமை அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

களனி பொலிஸ் வலயத்தில் இருந்தே அவர்கள் இவ்வாறு இருப்பிடங்களுக்கு அனுப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்,  கர்ப்பிணிகள், சிறுவர்கள் உள்ளிட்டோர் இதில் உள்ளடங்குவதாகவும் அவர்களுக்கு  வைத்திய பரிசோதனைகளை முன்னெடுத்த பின்னர் இவ்வாறு வீடுகளுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

முதல்கட்டமாக வீடுகளுக்கு அனுப்பப்படும் குறித்த 300 இற்கும் அதிகமானோர், பொலிஸ் பாதுகாப்புடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டிகளில், 23 மாவட்டங்களுக்கு அனுப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சரை தொடர்புகொண்டு கேட்க முற்பட்ட போதும் அவர் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை.

எனினும் அவரது அலுவலகத்தை தொடர்புகொண்ட போது,  ஏற்கனவே  இதற்கான வேலைத் திட்டம் வகுக்கப்பட்டாலும்,  இன்று சனிக்கிழமை முதல் அவ்வாறு அவர்கள்  வீடுகளுக்கு அனுப்படுகின்றார்களா என்பது குறித்த உத்தியோகபூர்வமான தகவல்கள் தங்களிடம் இல்லை என  அவரது அலுவலக அதிகாரிகள் கூறினர்.

No comments

Powered by Blogger.