முஸ்லிம் பெண் கொரோனாவால் மரணித்ததாக பொய்கூறிய 2 உடகங்கள் - தட்டிக்கேட்டார் ரெஹான் ஜயவிக்ரம
சட்டவிரோதமான முறையில் தமது நகரசபை எல்லைக்குள் பிரவேசித்து போலிச் செய்தி வெளியிட்டதாக இரண்டு பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக வெலிகம நகரசபையின் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம குற்றம் சுமத்தியுள்ளார்.
பெண் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்ததாக இரண்டு தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும் உண்மையில் நாட்பட்ட நோய்களினால் இந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.
ஊடக ஒழுக்க விதிகளை பின்பற்றி செய்தி அறிக்கையிட வேண்டியது அவசியமானது என நகரபிதா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா நோய்த் தொற்று என்ற சந்தேகமுடைய நபர்கள் தொடர்பில் செய்தி சேகரிப்பிற்காக அவர்களின் தனிப்பட்ட இருப்பிடங்களுக்கு செல்வதனை தடை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக நோய் வாய்ப்பட்டிருந்த பெண் ஒருவரே நேற்றைய தினம் வெலிகம வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்று திரும்பியதன் பின்னர் உயிரிழந்திருந்தார்.
எனினும், இரண்டு ஊடகங்கள் இந்தப் பெண் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததாக செய்தி வெளியிட்டிருந்தமை கண்டிக்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் பரிசோதனைகளின் போது குறித்த பெண்ணுக்கு வைரஸ் தொற்று கிடையாது என்பது உறுதியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரஸ் தொற்றினால் பெண் உயிரிழந்தார் என்ற பிரச்சாரத்தினால் பிரதேசத்தில் இன ரீதியான முரண்பாட்டு நிலைமை ஏற்படக்கூடிய அபாயம் காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் குறித்து கவனிக்கப்படாவிட்டால் அதுவே இன முரண்பாடாகவும் வெடிக்கக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக நிறுவனங்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment