முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரசாரம் மேற்கொள்வோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குக
முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத சக்திகள் திட்டமிட்ட வகையில் வெறுப்புப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் இது தொடர்பில் விசாரணைகளை நடாத்தி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் முஸ்லிம் அமைப்புகள் இணைந்து பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு முறைப்பாட்டு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், தேசிய சூறா சபை, வை.எம்.எம்.ஏ, ஜமாஅதே இஸ்லாமி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம், லங்கா மினாரத், பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் சங்கம், சலாமா சமூகம், கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனம், சமாதானத்தை மீள அடைதல் ஆகிய 11 அமைப்புகள் இணைந்தே இக் கடிதத்தை அனுப்பியுள்ளன.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் வெறுப்புப் பிரசாரங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடாத்தி நடவடிக்கை எடுக்குமாறு இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம் அமைப்புகளாகிய நாம், உங்களிடம் இந்த முறைப்பாட்டை முன்வைக்கிறோம். இலங்கை சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவரின் வீடியோ பதிவு உள்ளிட்ட பல பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரிமாறப்பட்டு வருகின்றன.
அவற்றில் இனந்தெரியாத நபர் ஒருவரால் வெளியிடப்பட்டு பொது மக்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகின்ற ஒலிப்பதிவொன்றை இத்துடன் இணைத்துள்ளோம். குறித்த ஒலிப்பதிவானது ஐ.சி.சி.பி.ஆர் சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம், தண்டனைச் சட்டக் கோவை உள்ளிட்ட நாட்டின் பல சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது. குறித்த பதிவை வெளியிட்ட நபரை இதன் மூலம் இலகுவாக கண்டறிய முடியும் என நாம் நம்புகிறோம்.
மேலும் கொவிட் 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் முழுமையாக கவனம் செலுத்தி வரும் நிலையில், நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் இன மற்றும் மதவாத பிரசாரங்களை ஏதேனும் குழுக்கள் திட்டமிட்டு மேற்கொள்கின்றனவா அல்லது அவற்றுக்கு உதவுகின்றனவா என்பது பற்றியும் விசாரணைகளை நடத்த வேண்டியது முக்கியமானது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். குறிப்பாக இந்த சக்திகள் திட்டமிட்ட வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தோற்றுவிக்கவும் திட்டமிட்டு செயற்படுகின்றனவா என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
எனவே இவை தொடர்பில் விரிவாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கடிதத்தில் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான விசேட செயலணியின் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Any response from Authorities???????????????????
ReplyDeleteமலடி பிள்ளை பெற்றகதைதான். அப்படியென்றால் தற்போது இருக்கின்ற பல அமைச்சர்களை கைதுசெய்யவேண்டும் அவர்கள் பகிரங்கமாகவே இனவாதச் செயற்பாடுகளை நேரலையாகவும் மறைமுகமாகவும் செய்துவருகின்ரார்கள்.
ReplyDeleteWhat a joke. He cant do anything. Only one of the Rajapaksa can stop this.
ReplyDelete