Header Ads



வீட்டில் இருப்பவர்களே உள்ளே இருங்கள் - மறைந்திருப்பவர்களே அல்லாஹ்வுக்காக வெளியே வாருங்கள்

இன்று உலகில் இன்று 200 க்கும் மேற்பட்ட நாடுளில், கொரோனா வைரசின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது.  பல ஆயிரம் உயிர்களை பலியெடுத்து மக்கள் அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.

எமது தாய் திருநாட்டிலும் 143 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு, 2 பேர் மரணமடைந்து மற்றும் பலர் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர்.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை அரசு கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.

ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், டாக்டர்கள், தாதிகள் முப்படையினர் என அனைவரும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எமது நன்றிகள்.
இவ்வேளையில் முஸ்லிம்களாகிய எமது கடமையானது, அரசாங்கம் எடுக்கும் சகல முயற்சிகளுக்கும், செயற்பாடுகளுக்கும் நாம் கட்டுப்பட்டு, ஒத்துழைப்பும் நல்க வேண்டும்.

சுகாதார தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் பின்பற்றி, நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பது எமது கடமையாகும். அதனை மீறி நடப்பது பாவம் ஆகும்.

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் இருப்பவர்களே உள்ளே இருங்கள் என அறிவுறுத்தல் விடுத்த அரசு வெளிநாடுகளில்  இருந்து குறிப்பிட்ட திகதிகளில் நாட்டுக்கு வந்தவர்கள் தங்களின் விபரங்களை  பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்ள பலர் மறைத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நமது முஸ்லிம் சகோதரர்களில் சிலர் சில நாடுகளில் நடந்த இஜ்திமாக்களில் கலந்து கொண்டதாகவும், நாடு திரும்பிய பின் மறைந்திருப்பதாகவும் ஊடகங்கள் சொல்கின்றன.

அப்படி யாரேனும் மறைந்திருந்தால், அவர்கள் அல்லாஹ்வுக்காக வெளியே வாருங்கள், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்கள் கரங்களால் உங்களை அழிக்காதீர்கள் என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இவ்வாறு நீங்கள் செய்வது உங்களுக்கும், இந்த நாட்டிற்கும் செய்யும் அநியாயம்.

இப்படியான நேரத்தில் சமூக ஊடகங்களில் காலத்தை வீணடிக்காமல், அமல்கள் பாவமன்னிப்பு மூலம் அல்லாஹ்வை நெருங்குவோம். பர்ளான சுன்னத்தான தொழுகைகளை விடாமல் தொழுதுகுர்ஆனை அதிகமாக ஓதி துஆ செய்வோம்.

கேள்விப்படும் எல்லா தகவல்களையும் பரப்பாமல், பிறரை குறைகூறி விமர்சனங்களை செய்யாமல், குடும்பத்தோடு அதிகமான காலத்தை செலவுசெய்து  இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

மௌலவி  எம்.எஸ்.எம். தாஸீம் (கபூரி)
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா


No comments

Powered by Blogger.