Header Ads



யாழ்ப்பாணத்தில் ஆராதனை நடத்திய போதகருக்கு கொரோனா, சுவிஸ் நாட்டில் சிகிச்சை - கலந்துகொண்டோர் தொடர்புகொள்க


யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகரினால் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சுவிஸ் நாட்டில் சிகிச்சை பெறுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த ஆராதனையில் கலந்துகொண்ட இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மருத்துவ அறிக்கைகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று இவ்வாராதனையில் கலந்துகொண்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குறித்த ஆராதனையில் கலந்துகொண்ட மக்களை யாழ்ப்பாண பிராந்திய சேவைகள் பணிமனையின் தொடர்பிலக்கத்திற்கு (0212227278) உடனடியாக தொடர்பு கொண்டு தங்களது விபரங்களை தெரிவிப்பதன் மூலம் மருத்துவ அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும் நேரடியாக அவர்களது இடங்களுக்கு செல்வதன் மூலமாகவும் பாதுகாப்பான முன்னெச்சரிக்கை ஒழுங்குகள் செய்யப்படும் என்றும் இவ்வாறு தம்மை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்துவதற்கான ஒழுங்குகளை செய்வது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் பிராந்தியத்திலுள்ள இதர மக்களுக்கும் தற்கால கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காலத்தில் அவசியமானதும் பாதுகாப்பானதுமாகும் என்றும் தெரிவிக்கபட்டிருக்கும் அதேவேளை மருத்துவ அதிகாரிகளின் தொடர்புகள் கிடைக்கும் வரை தங்களை இயன்ற அளவில் பாதுகாப்பாக தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தும் படியும் கோரப்பட்டுள்ளது.

மேலும், யாழ் பிராந்திய மக்களுக்காக வடமாண ஆளுநர் செயலகத்தின் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.