Header Ads



உலகிலே கொரோனாவால் அதிக, பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா - சீனாவில் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை குறைவது குறித்து டிரம்ப் சந்தேகம்

85,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளுடன் உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவின்படி, கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா (81,782), இந்த தொற்றால் பேரழிவை சந்தித்து வரும் இத்தாலி (80,589) உள்ளிட்ட நாடுகளை விஞ்சிய அமெரிக்காவில் இதுவரை 85,653 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனினும், உயிரிழப்புகளை பொறுத்தவரை, அமெரிக்காவை (1200) விட இத்தாலி (8,215), ஸ்பெயின் (4,365) மற்றும் சீனாவில் (3169) ஆகியவை அதிக இழப்புகளை சந்தித்துள்ளன.

உலகளவில் பார்க்கும்போது, 531,860 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,057 என்னும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அமெரிக்கா “மிகவும் வேகமாக” மீண்டெழும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று (வியாழக்கிழமை) கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடு என்னும் நிலையை அமெரிக்கா பெற்றுள்ளது.

இதன் மூலம், கடந்த டிசம்பர் மாதம், முதன் முதலில் கண்டறியப்பட்டு இந்த நோய்த்தொற்றின் மையமாக விளங்கிய சீனா, கடும் உயிரிழப்புகளை சந்தித்து வரும் இத்தாலி ஆகியவற்றுக்கு அடுத்ததாக கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய மையமாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தினந்தோறும் வெள்ளை மாளிகையில் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப், “நாம் செய்து வரும் பரிசோதனைகளின் எண்ணிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். நம் நாட்டு மக்கள் பணிகளுக்கு திரும்ப வேண்டும், நாடும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். இது மிகவும் விரைவில் நடக்கும் என்று நான் கருதுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து சந்தேகம் தெரிவித்த டிரம்ப், “சீனாவில் நிலவும் உண்மை நிலை குறித்து உங்களுக்கு தெரியாது” என்று கூறினார்.

No comments

Powered by Blogger.