உலகளாவிய ரீதியில் சகல, எமிரேட்ஸ் விமானங்களும் இரத்து
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், இம்மாதம் புதன்கிழமை (25) முதல் அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்துவதாகவும் வணிக விமானங்கள் தொடர்ந்து இயங்குமெனவும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
டுபாயைத் தளமாகக் கொண்ட அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான இந்த விமான நிறுவனம், இன்று தனது டுவிட்டரில் 'இன்று நாங்கள், 25 மார்ச் 2020 க்குள் அனைத்து பயணிகள் விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கும் முடிவை எடுத்திருக்கிறோம். எனினும் ஸ்கை கார்கோ நடவடிக்கைகள் தொடரும். இந்த வேதனையான ஆனால் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கை, எமிரேட்ஸ் குழுமத்தின் பொருளாதார மற்றும் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கவும், ஊழியர்களின் வேலைகளைப் பாதுகாக்கவும், வேலையின்மையைத் தவிர்க்கவும் உதவும்’ என்று அறிவித்துள்ளது.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஷேக் அஹமது பின் சயீத் அல் மக்தூம், இது சம்பந்தமாக மேலும் கூறியதாவது: ‘கொவிட் -19 தாக்கத்தின் காரணமாக உலகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது பரந்தளவிலான நெருக்கடி நிலைமையினை புவியியல் ரீதியாகவும் சுகாதாரம், சமூக மற்றும் பொருளாதாரத்திலும் ஏற்படுத்தியுள்ளது' என்றார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் கொவிட்-19 தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட முதல் இரண்டு இறப்புகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment