Header Ads



யாழ்ப்பாணத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, 80 வீடுகள் மீது கடும் கண்காணிப்பு


இவர்களுள் 192 பேர் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேஷன் தெரிவித்துள்ளார். 

80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று நிலைமை தொடா்பாக ஊடகங்களுக்கு நேற்று (23) மாலை கருத்துத் தெரிவித்த தாவடி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களை உள்ளடக்கியதான ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். 

ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுவதால் நோய் பரவலை தடுக்கலாம். எனவே மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். தமக்குத் தேவையான உதவிகளை மக்கள் தமது பிரதேச செயலர் ஊடாகத் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம். வெதுப்பகப் பொருட்களை விநியோகம் செய்ய இன்று காலை நடவடிக்கை எடுத்தோம். அதனை மாலையிலும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எமது முயற்சி வெற்றியளித்துள்ளது. மேலும் மருந்துகளையும் விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருப்பதுடன் அத்தியவசிய உணவுப் பொருட்களையும் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் அரசாங்க அதிபர் கூறினார். 

பிரதேச செயலர்கள் ஊடாக 64 ஆயிரம் குடும்பங்களை இனங்கண்டிருக்கிறோம். அவர்களுக்கு உலர் உணவு விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அனர்த்த முகாமைத்துவப் பிரிவு ஊடாக ஒரு மில்லியன் ரூபாய் நிதியை வழங்க அந்த அமைச்சு இணங்கியுள்ளது. மேலும் பிரதமர் ஊடாக மாவட்டத்திற்கு ஒரு மில்லியன் வழங்கவும் இணக்கம் காணப்பட்டிருக்கிறது. எனவே மக்களுக்கான உதவிகள் கிடைக்கும். மக்கள் விழிப்பாக இருப்பதுடன் நோய் பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்´ என்றும் அவர மேலும் தெரிவித்தார். 

-யாழ். நிருபர் பிரதீபன்-

No comments

Powered by Blogger.