Header Ads



விசமப் பிரசாரத்தால் சாய்ந்தமருது, நகரசபைக்கான வர்த்தமானி இடைநிறுத்தம்

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட நிர்வாக சேவை உத்தியோகத்தரான  ஏ.எல்.எம்.சலீம்  ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சமூக மாற்றத்துக்கும் அபிவிருத்திக்கான  மையத்தை ஸ்தாபித்து தலைவராக இருக்கும் இவர் சமூகப்பணிகளில் ஈடுபட்டு  வருகின்றார். தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய செவ்வி..... 

கேள்வி: நிர்வாக சேவை உத்தியோகத்தர் என்ற வகையில் பிரதேச  செயலாளராகவும் நீங்கள் பணியாற்றியிருக்கிறீர்கள். பிரதேச மட்ட மக்களின்  பிரச்சினைகளை தீர்ப்பதில் உங்களால் எந்தளவுக்கு பங்களிப்புச்  செய்யக்கூடியதாக இருந்தது?  

பதில்: 2007ஆம் ஆண்டு சாய்ந்தமருது பிரதேச செயலாளராக  வரும்போது கவலையோடுதான் வந்தேன். ஏறக்குறைய சுனாமியால் பாதிக்கப்பட்ட  800க்கு மேற்பட்ட குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் இடைத்தங்கல்  முகாமில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எந்தவொரு  வீட்டுவசதியும் செய்யப்படவில்லை. ஒரு அலுவலராகவாவது இதற்கான வேலைகளை செய்ய  வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் வந்தேன்.  

கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் போன்ற பல்வேறு  வேலைத்திட்டங்களை அன்றிருந்த அரசாங்கம் முன்வைத்திருந்தது. பொலிவேரியன்  கிராமத்துக்கான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்தது. அதனால்  பாடசாலை, பள்ளிவாசல், பல்தேவைக் கட்டிடம், விளையாட்டு மைதானம்,  பிரதேசத்துக்கு தேவையான அலுவலகங்கள் என சகல வசதிகளையும் உடைய ஒரு கிராமமே  உருவாகும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட அக்கிராமத்துக்கு அரச  மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதியினூடாக நூறு கோடி ரூபாவுக்கு மேல்  செலவிடப்பட்டுள்ளது. இன்றைக்கு அது ஒரு அழகான கிராமமாக உள்ளது.  

அதேபோன்று சாய்ந்தமருது பிரதேசத்துக்குள் அதிகமான வீதிகளை  புனர்நிர்மாணம் செய்திருக்கின்றோம். நான் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில்  10வருடங்களுக்குட்பட்ட காலத்துக்கு பிரதேச செயலாளராக கடமை  புரிந்திருக்கிறேன்.  

பிரதேச செயலாளராக இருந்த காலங்களில் எனது பிரதேச  எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இனம் காணப்பட்ட பிரச்சினைகளை மத்திய மற்றும்  மாகாண அரசோடு இணைந்து செய்யக்கூடியதாக இருந்தது.  

கேள்வி: பிரதேசங்களில் காணி, வீட்டுத்திட்டம் போன்ற பல்வேறு  பிரச்சினைகள் இப்பிரதேசங்களில் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக  காணப்படுகின்றன. இவற்றுக்குத் தீர்வுகாண்பதற்கு நீங்கள் முன்வைக்கும்  ஆலோசனை என்ன?  

பதில்: முதலில் அனைவரும் தேசிய நல்லிணக்கத்துடன் செயற்பட  வேண்டும். அக்கரைப்பற்றில் காணிப்பிரச்சினை, வீட்டுத் திட்டங்களை பகிர்ந்து  கொள்வதிலுள்ள இரு சமூகங்களுக்கிடையிலான பிரச்சினை. அதேபோன்று கல்முனையில்  தமிழ் மக்களுடைய பிரதேச செயலக தரமுயர்த்தல் தொடர்பான பிரச்சினைகள் என பல  பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவை சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம்  இருக்குமாக இருந்தால் பேசித் தீர்த்திருக்க முடியும். ஆனால்  சமூகங்களுக்கிடையிலான துருவப்படுத்தல்களால் அப்பிரச்சினைகள் தொடர்ந்தும்  தீர்க்கப்படாமல் பிரச்சினைகளாக தொடர்கின்றன.  

இன்று மருதமுனை வீட்டுத்திட்டம், நுரைச்சோலை வீட்டுத்திட்டம்  ஆகியன சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென பகிர்ந்தளிக்கப்படுவதற்காக  கட்டப்பட்டவை. ஆனால் பல வருடங்கள் ஆகியும் இன்னும் அவை  பகிர்ந்தளிக்கப்படவில்லை. அவ்வீட்டுத் திட்டங்கள் வீணாக சீரழிந்து  விடுகின்றன. உண்மையில் இது உரிய காலத்தில் வழங்கப்படாமல் போனதால் அவற்றை  சுனாமி சுற்று நிருபத்துக்குள் வழங்கமுடியாது. தற்போது சுனாமி  சுற்றுநிருபமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அவற்றை காணிக் கச்சேரி வைத்து  வீடில்லாதவர்களுக்கு கொடுக்க முடியும்.  

சாய்ந்தமருது பிரதேச செயலாளராக இருந்த போது சுனாமியால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு 800க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டிக்  கொடுத்திருக்கிறோம். அதனை நாங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தான்  கட்டி வழங்கினோம். அதற்கு வீடு கட்டும் முன்பே பொருத்தமான ஆட்களை அடையாளம்  கண்டு அவர்களுக்கென்றே அவ்வீட்டை நிர்மாணித்தோம். அதனால் பயனாளிகளின்  மேற்பார்வையும் பங்களிப்பும் அவ்வீடு நிர்மாணிப்பின் போது இருந்தது. வீட்டு  நிர்மாணிப்பின் போது முரண்பாடுகளை தவிர்ப்பதற்கு அந்த வழிமுறைகளை  கையாண்டோம்.  

கேள்வி: சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கை மிக நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு அண்மையில் அது நகர சபையாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்த வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக உங்களது கருத்து என்ன? 

பதில்: பிரதேச சுகாதார பிரச்சினைகளை பார்ப்பதற்காக பிரிட்டிஷார் 1897கொண்டு வந்த statuary Board ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேசம் 1987வரைக்கும் ஒரு தனியான உள்ளூராட்சி சபையைக் கொண்டிருந்தது. சாய்ந்தமருது ஒரு சபையாகவும் கல்முனை இன்னுமொரு சபையாகவும் இருந்தது. இவ்வாறு தனியான சபையைக் கொண்டிருந்த பழமைவாய்ந்த இந்தப் பிரதேசம் 1987இல் அரசியல் ரீதியாக கல்முனையுடன் இணைக்கப்பட்டது.  

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் 120,000க்கும் உட்பட்ட மக்கள் இருக்கின்றார்கள். 7பெரிய கிராமங்களை இந்த மாநகர சபை உள்ளடக்கியுள்ளது. இங்கிருக்கின்ற வளம் குறைவாகும். அதனால் பிரதேசங்களுக்கு இந்த மாநகர சபையினால் கிடைக்கப் பெறும் சேவைகளும் குறைவாகும். உள்ளூராட்சி என்பது ஒரு பிரதேசத்திலுள்ளவர்கள் தங்களைத் தாங்களே தீர்மானிக்கின்ற ஒரு குட்டி அரசாங்கம். சாய்ந்தமருது 20ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட 30ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களைக் கொண்டுள்ள பிரதேசம்.  

2001ஆம் ஆண்டிலிருந்து தனியான பிரதேச செயலகத்தைக் கொண்டு இயங்குகிறது. உள்ளூராட்சி சபையின் எல்லையாக இருப்பதில் மிக முக்கியமான எல்லை பிரதேச செயலக எல்லையாகும். அப்படியான ஒரு எல்லையைக் கொண்டுள்ள பிரதேசத்துக்கு அப்பவே உள்ளூராட்சி சபை கிடைக்கப் பெற்றிருக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காகவும் தமது வாக்கு வங்கிகள் உடைக்கபட்டு விடும் என்பதற்காகவும் இது இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டு வந்தது.  

தற்பொழுதுள்ள அரசாங்கத்தில் சாய்ந்தமருதுக்கான நகர சபை கிடைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கடந்த 14ஆம் திகதி விசேட வர்த்தமானி இல 2162/50மூலம் சாய்ந்தமருது நகர சபையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் மாற்றுக் கட்சியினரின் விசமத்தனமான பிரச்சாரங்களால் அரசாங்கத்துக்கு ஒரு சிக்கல் நிலையை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கிறது.  

ஆனால் சாய்ந்தமருதைப் பொறுத்தவரையில் அரசாங்கத்துக்கோ அல்லது நாட்டுக்கோ எந்த பிரச்சினையும் இல்லாத ஒரு பிரதேசம். குறிப்பாக கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து அதனுடைய சூத்திரதாரியின் குடும்பம் தற்காலிகமாக தங்கியிருந்த இடத்தை சாய்ந்தமருது மக்கள் முற்றுகையிட்டு அதனை பொலிசுக்கும் இராணுவத்துக்கும் தெரியப்படுத்தி மீண்டுமொரு பயங்கரவாதம் ஏற்படாமல் இருப்பதற்கு பங்களிப்பு செய்துள்ளார்கள்.

ஆனால் மாற்றுக் கட்சியினர் ஸஹ்ரானினுடைய பிரதேசம் என்று விசமப் பிரசாரங்களைக் கொண்டு விமர்சிக்கின்றனர். ஆனால் இவ்வாறான தீவிரவாதிகள் யாரும் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்.

இந்த விசமப் பிரசாரத்தால் தற்காலிகமாக சாய்ந்தமருது நகரசபைக்கான வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதை மிக விரைவில் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

நேர்காணல் ஏ.மொஹமட் பாயிஸ்

No comments

Powered by Blogger.