Header Ads



யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் கொரோனா, வைரஸிற்கான சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸிற்கான சிகிச்சைப் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொனோரா வைரஸ் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் து. சத்தியமூர்த்தி தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்துள்ள பீதி தொடர்பாக இன்று (5) யாழ். போதனா வைத்தியசாலையில், வைத்திய நிபுணர்கள் மத்தியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

கொரோனா வைரஸிற்கான சிகிச்சைப் பிரிவு யாழ். போதான வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், வைரஸ் இருக்குமோ என்ற சந்தேகத்திற்கிடமானவர்களை அனுமதித்து, விசேட சிகிச்சைகள் அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், வைத்திய நிபுணர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் பணிப்பாள் தெரிவித்தார். 

பூரண சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸ் தொடர்பான சிகிச்சை அளிப்பதற்கு சுகாதார அமைச்சு, உரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 

இதனால், யாழ்ப்பாணத்தில், குறிப்பாக வடமாகாணத்தில் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் பீதியடையத் தேவையில்லை என்றும், சீன பெண் தவிர்ந்த ஏனைய எவரும், கொரோனா வைரஸ் தொடர்பில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டினார். 

எனவே, கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் பயப்பட தேவையில்லை. அத்துடன், முகக்கவசம் அணிய் தேவையில்லை. 

தொற்றுக்குள்ளான நபர் ஒருவருடன் நெருக்கமாக பழகும் போதும், அதாவது 2 மீற்றர் தூரத்திற்கு நெருக்கமாக பழகும் போது, பரவும் வாய்ப்பு உள்ளதாகவும், அதனால், இந்த தொற்று தொடர்பில் மக்கள் எந்தவித பயமும் அடையத் தேவையில்லை என்றார். 

சில நேரங்களில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தமக்கு இருக்குமோ என்ற சந்தேகத்தில் வைத்தியசாலைக்கு பரிசோதனை செய்வதற்காக வருகின்றனர். அவ்வாறு வருபவர்களுக்கான உரிய பரிசோதனைகள் செய்யப்படுகின்றதென்றும், இதுவரையில் 17 பேருக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டத்தில் ஒரே ஒரு சீனப் பெண் ஒருவரே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். 

இருமல் மற்றும் சளி இருப்பவர்கள் இவ்வாறு பரிசோதனை செய்வதற்காக வருகின்றார்கள். இந்த பரிசோதனைகளை, உரிய முறையில், மிகவும் பாதுகாப்பான முறையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும், ஆகையினால், கொனோரா வைரஸ் பற்றிய எந்தவித பயமும் பொது மக்களுக்கு தேவையில்லை என்றும், அது தொடர்பான பீதியை அடையத் தேவையில்லை என்றும் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட வைத்திய குழுவினர் தெரிவித்தனர். 

-சுமித்தி-

No comments

Powered by Blogger.