இலங்கையை அச்சுறுத்தும் பக்கவாதம் - நான்கு பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் ஆபத்து
இலங்கையில் தமது வாழ்நாளில் நான்கு பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் பக்கவாத ஆபத்தை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் நிபுணரான மருத்துவ கலாநிதி காமினி பத்திரன அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
எனினும் பக்கவாதம் என்பது தடுக்கக்கூடிய அதேபோன்று சுகமாக்கக்கூடிய ஒன்று. கொழும்பை பொறுத்த வரையில் 1000 பேரில் 9 பேர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இலங்கையில் 2 இலட்சம் பக்கவாத நோயாளிகள் உள்ளனர். முன்னதாக பக்கவாதம் என்பது 6 பேருக்கு ஒருவர் என்ற ரீதியிலேயே இருந்தது. எனினும் தற்போது அது தீவிரமடைந்துள்ளது.
முன்னர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 16 வீதத்தினர் ஒரு மாதத்துக்குள் மரணமாகும் சந்தர்ப்பங்கள் இருந்தன. எனினும் அரைவாசிப்பங்கினர் சிறிய இயலாமையுடன் வாழக்கூடியவர்களாக இருந்தனர்.
இலங்கையை பொறுத்தவரையில் மரணத்தை ஏற்படுத்தும் நான்காவது ஏதுவாக பக்கவாதம் அமைந்துள்ளது.
இலங்கையில் மரணத்தை ஏற்படுத்தும் முதலாவது ஏதுவாக மாரடைப்பு உள்ளது. இரண்டாவது ஏதுவாக புற்றுநோய் உள்ளது.
இதேவேளை உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய், அதிக கொழுப்பு அளவு, மன அழுத்தம் போன்ற பிற சுகாதார நிலைகளின்போது மக்கள் மத்தியில் உள்ள அனுபவ குறைவே பக்கவாதத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.
சாதாரணமாகவே பக்கவாதம் என்பது முன்கூட்டிய எச்சரிக்கை இன்றி ஏற்படும் நோயாகும். எனினும் 90 வீதமான பக்கவாத நோய்களை தடுக்க முடியும்.
நோயாளிகளுக்கு மூன்று மணித்தியாலங்களுக்குள் சிகிச்சை அளித்தால் அவர்களுக்கான இயலாமையை குறைக்க முடியும்.
எனவே பக்கவாதம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு எவ்வித குடிநீரையும் கொடுக்காது உடனடியாக வைத்திசாலைக்கு அழைத்து செல்ல வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment