Header Ads



ஆபத்தான இடமாக, இந்தியா மாறி வருகிறது

அமைதியான போராட்டங்கள் நடத்த இந்தியா நாடு ஆபத்தான இடமாக மாறிவருகிறது என மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறுகிறது. போராட்டக்காரர்கள் பயங்கரவாதிகள், துரோகிகள், தேச விரோதிகள் என கூறப்பட்டு, அடக்குமுறை சட்டங்களின்கீழ் பலர் கைது செய்யப்படுகிறார்கள் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் குறிப்பிடுகிறது.

அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவது குற்றமல்ல. அரசின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளதவர்கள் துரோகியாக முடியாது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும் பொதுமக்களும் அமைதியான போராட்டங்களை நடத்துகையில், கட்சி தலைவர்கள் போராட்டக்காரர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர், அதிகாரிகள் அமைதியான போராட்டக் காரர்களை பாதுகாக்க தவறியுள்ளனர் என அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் அவினாஷ் குமார் கூறுகிறார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்கிறார். பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் வாக்களித்தால், ஷாஹீன் பாக் சம்பவங்கள் போல எதுவும் நடக்காமல் நாட்டை பாதுகாப்போம் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஷாஹீன் பாகில் மிகப்பெரிய போராட்டடம் நடக்கிறது. இந்தப் போராட்டத்தை முஸ்லிம் பெண்கள்அமைதியான முறையில் முன்னெடுக்கின்றனர்.

ஷாஹீன் பாகில் போராட்டம் நடத்துபவர்கள், உங்கள் வீடுகளுக்குள் உங்கள் வீட்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வார்கள் என மக்களை அச்சுறுத்தும் வகையில் பா.ஜ.க எம்.பி பர்வேஷ் வர்மா ஜனவரி 28ம் தேதி உரையாற்றினார்.

ஜனவரி 30ம் தேதி, மகாத்மா காந்தியின் நினைவு நாளன்று, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டின்போது காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் நின்றுகொண்டிருப்பதைக் காட்டும் காணொளிகள் வெளியாகின. அப்போது மாணவர் ஒருவரின் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிகிறது. பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய நபர் 18 வயதாகாத மைனர் என்பது தெரியவருகிறது.

ஏற்கனவே உத்தரப்பிரதேத முதல்வர் யோகி ஆதித்யநாத், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறி இருந்தார். மேலும் வாரணாசி மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் போராட்டத்தின்போது காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிக்சை பெற்றுக்கொள்ளவே அஞ்சியதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறுகிறது. ஏனெனில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டாலே, அவர்களிடம் நடத்த தாக்குதலை ஒப்புக்கொண்டு இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்படும் சூழல் உத்தர பிரதேசத்தில் நிலவியது. பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அபராதம் கட்ட வேண்டிய சூழலை தவிர்க்க பலர் அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையே வெளியில் சொல்ல பயந்தனர் என்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் குறிப்பிடுகிறது.

டிசம்பர் 2019ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம், குறித்து மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்க இந்திய அரசாங்கம் தவறிவிட்டது. அமைதியாக நடைபெற்ற போராட்டங்களையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.

2019ம் ஆண்டு மே மாதம், பிரதமர் நரேந்திர மோதி தனது உரையின்போது ''எங்களை நம்பும் மக்களுக்கு நாங்கள் உறுதுணையாக நிற்போம் என்று உறுதியளித்தார். ஆனால் எதிர்பாராத விதமாக பிரதமர் நரேந்திர மோதி அமைதியாக போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் நம்பிக்கையைக் காக்க தவறிவிட்டார் என அவினாஷ் குமார் கூறுகிறார்.

No comments

Powered by Blogger.