Header Ads



ரணில் விடாப்பிடி, சஜித்துடன் கூட்டணிசேர மறுப்பு

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி யானை சின்னத்தின் கீழ் போட்டியிடாத பட்சத்தில் அந்த கூட்டணியில் இணையாது தனித்து யானைச் சின்னத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை போட்டியிட வைப்பதென அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

நேற்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு சஜித் பிரேமதாஸவின் புதிய அரசியல் கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கி அதற்கு ரஞ்சித் மத்துமபண்டார எம் பியை செயலராக நியமிக்க அனுமதியளித்தது.அதேசமயம் வரும் பாராளுமன்ற தேர்தலில் யானை சின்னத்தின் கீழ் தான் இந்த அரசியல் கூட்டணி தேர்தலில் இறங்கவேண்டுமென நேற்றைய செயற்குழுவில் ரணில் தரப்பு வலியுறுத்தியிருந்தது.

ஆனால் புதிய அரசியல் கூட்டணி இதய சின்னத்தில் போட்டியிட ஏலவே உத்தேசித்துள்ளதால் நேற்றைய கூட்டத்தில் எந்த பதிலையும் கூறாது சஜித் தரப்பு வெளியேறியிருந்தது.

அதனையடுத்து கட்சியின் முக்கியமான உறுப்பினர்களுடன் நேற்றிரவு நீண்ட மந்திராலோசனை நடத்திய ரணில் ,வரும் தேர்தலில் யானைச் சின்னத்தில் மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுமென திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கூட்டணி அமைத்து வெளியாரின் சின்னத்தில் போட்டியிட இடமளித்தபோதும் இம்முறை கட்சியின் சொந்த சின்னத்தில் போட்டியிடுவதே நல்லதெனவும், புதிய அரசியல் கூட்டணி இதனை விரும்பாத பட்சத்தில் அவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி சேராதெனவும் ரணில் திட்டவட்டமாக இங்கு தெரிவித்துள்ளார்.

sivarajah

1 comment:

  1. இதோ பாருங்க..
    யாரோட கூட்டணி சேரச் சொன்னாலும் சேருவன்.
    ஆனா இந்த சஜித்தோட மட்டும் சேர மாட்டன்.
    என்ன சின்னத்துல வேணுமிண்டாலும் போட்டியிடுவோம்.
    இந்த இதய சின்னத்துல மட்டும் போட்டியிட மாட்டோம்.

    ReplyDelete

Powered by Blogger.