Header Ads



லொறியின் உதவியாளரை தீ மூட்டி எரித்துவிட்டு 5 இலட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியவர் கைது

திருமலையில் லொறியில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு ; தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது
திருகோணமலை-பாலம் போட்டாறு  பகுதியில்   லொறியின் உதவியாளரை தீ மூட்டி கொலைசெய்த குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்த சாரதியை மன்னாரில் வைத்து  இன்றிரவு (05) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி யோகநாதன் (47 வயது) எனவும் தெரியவருகின்றது. 

இதேவேளை அவரது   மனைவியான கௌரி  மனோகரி (37 வயது) என்பவரையும் தம்பலகாமம் பொலிசார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரியவருகின்றது. 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த பெப்ரவரி  முதலாம் திகதி  பொலன்நறுவை-ஹிங்குராங்கொட பகுதியிலிருந்து லொறி ஒன்றில் சாரதியும் அவரது உதவியாளரும் திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது சாரதிக்கு தூக்கம் ஏற்பட்ட  நிலையில்  லொறியை நிறுத்தியுள்ளதாக    தெரியவருகின்றது. 

 இந்நிலையில் அன்று அதிகாலை வீதியோரத்தில் லொறி ஒன்றில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக தம்பலகாமம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டதுடன் திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் றுச்சிர நதீர பார்வையிட்டதையடுத்து  சடலம் வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

 இதனையடுத்து இறந்து கிடப்பவர் லொறியின் சாரதியான திருகோணமலை-மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த  கந்தசாமி யோகநாதன் 47 வயதுடைய  நபரின் சடலம் எனவும்  தெரியவந்தது. 

 இதேவேளை விசாரணைகளை மேற்கொண்ட தம்பலகாமம் பொலிசார்  லொறியில் பயணித்த உதவியாளர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் உதவியாளர் அதே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஹேவகே விஜேதாஸ  என்பவர்  வீடு திரும்பவில்லை எனவும் தெரியவந்தது. 

இந்நிலையில்  லொறியில்  பயணித்த சாரதி தொடர்பில் சந்தேகம் எழுந்த நிலையில்   சாரதியின் வீட்டில் அவரது மரணம் தொடர்பில் மரண அறிவித்தல் பதாதைகள் போடப்பட்டிருந்த நிலையில் சாரதியான கந்தசாமி யோகநாதன் உதவியாளரை லொறியில் வைத்து   தீ மூட்டி எரித்துவிட்டு ஐந்து இலட்சம் ரூபாய் பணத்தையும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையையும் எடுத்துக்கொண்டு  தலைமறைவாகி இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. 

 இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட தம்பலகாமம் பொலிசார் தீ மூட்டி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டின் பேரில் லொறியில் பயணித்த சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

 இதனையடுத்து சந்தேக நபர் முல்லைத்தீவு மற்றும் மன்னார் பகுதிகளுக்கு   சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில் அங்கு சென்றவர் பொலிஸ் குழுவினர் இன்றிரவு ஏழு மணியளவில் சந்தேகநபரான கந்தசாமி யோகநாதன் என்பவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

 ஆனாலும் அவருடன் உதவியாளராக லொரியில் சென்ற 52  வயதுடைய ஹேவகே விஜேதாஸ  என்பவரது சடலம் உறவினர்களினால்  அடையாளம் காணப்பட்டிருந்தபோதிலும்  அவரது உடலின் உடற்பாகங்கள் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் டிஎன்ஏ பரிசோதனைகளை   முன்னெடுப்பதற்காக இன்னும் இரத்த மாதிரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை  சட்ட வைத்திய நிபுணர் றுச்சிர நதீர  தெரிவித்தார். 

 அத்துடன் தனது உதவியாளராக சென்ற நபரை எதற்காக தீ மூட்டினார் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிசார் தெரிவித்தனர். 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான 47 வயதுடைய கந்தசாமி யோகநாதன் என்பவரை மன்னார் பொலிஸ் நிலையத்திலிருந்து தம்பலகாமம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்ல உள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

2 comments:

  1. தமிழர்கள் ஏன் இப்படி கொலை வெறிபிடித்து அலைகிறார்கள்?

    ReplyDelete
  2. இப்படி ஒரு சிங்களவரை முஸ்லிம் ஒருவர் தீமூட்டி கொலை செய்திருந்தால் நிலமை எவ்வாறு இருந்திருக்கும்?

    ReplyDelete

Powered by Blogger.