எமக்கு சவாலாக இருப்பது, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவதாகும் - சஜித்
ஜனவரி மூன்றாம் திகதி பாராளுமன்றம் கூடும் போது தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுமானால், எதிர்க்கட்சிக் காரியாலயம் நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் காரியாலயமாக மாறும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தேர்தலின் பின்னர் எமது கட்சி ஆதரவாளர்கள் அதிகமானோர் தினந்தோறும் பழிவாங்கலுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் ஜனாதிபதி தேர்தலில் தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நீர்கொழும்பில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார்
பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியின் நீர்கொழும்பு அமைப்பாளருமான வைத்தியர் காவிந்த ஜயவர்தன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, விஜயமுனி சொய்சா, ஜோன் அமரதுங்க, மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் பங்குபற்றினர்.
பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எமக்கு சவாலாக இருப்பது நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றிபெறுவதாகும். இது கடினமான காரியமாக இருந்தாலும் தேர்தல் பின்னடைவில் பாடங்களை கற்றுக்கொண்டு எமது குறைகளை சரிசெய்து கொண்டு ஜனாதிபதி தேர்தலைவிட விட நடைபெறவுள்ள தேர்தலில் பல மடங்கு கடினமாக உழைத்து எமது இலக்கை அடைவதாகும். சகலரையும் இணைத்துக்கொண்டு இந்த வெற்றிப் பயணத்தை நோக்கி பயணம் செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
தேர்தலின் பின்னர் எமது கட்சி ஆதரவாளர்கள் அதிகமானோர் பழிவாங்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஜனவரி மூன்றாம் திகதி பாராளுமன்றம் கூடும்போது எனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுமானால், எதிர்க்கட்சி காரியாலயம் நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் காரியாலயமாக மாறும். அங்கு அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் விசேட பிரிவு அமைக்கப்படும். பழிவாங்கல்களுக்கு ஆளானவர்களின் தகவல்கள் பெறப்பட்டு எமது ஆட்சியில் உடனடியாக அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Post a Comment