ஐதேக தலைமைத்துவத்தை தீர்மானிக்க, இரகசிய வாக்கெடுப்பு - லக்ஸ்மன் கிரியெல்ல
(ஆர்.யசி)
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் குறித்து கட்சிக்குள் பலவித மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்ற நிலையில் கட்சியின் தலைமைத்துவ மாற்றம் குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை இறுதித் தீர்மானம் ஒன்றினை எட்ட முயற்சிப்பதாகவும் தீர்மானம் எட்டப்படாவிட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ தீர்மானங்கள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சிக்குள் தலைமைத்துவ மாற்றம் குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை கட்சியின் தலைவராக்க வேண்டும் எனவும் பிரதமர் வேட்பாளராக அவரையே களமிறக்க வேண்டும் எனவும் கட்சிக்குள் ஒரு சாரார் கூறி வருகின்றனர். எனினும் மல்வத்து அஸ்கிரிய பீடங்கள் மற்றும் அமரபுர நிகாயவினர் கரு ஜெயசூரியவை தலைவராக்க வேண்டும், பெளத்த சிங்கள வாக்குகளை பலப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.
எனவே எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் கட்சிக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்படும், அதில் இறுதி தீர்மானம் ஒன்றினை எடுக்க வேண்டும் என்றே அனைவரும் கூறுகின்றனர். ஆகவே 16 ஆம் திகதி இறுதித் தீர்மானம் எட்டப்படும் என நாமும் எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு முடியாமல் போனால் இரகசிய வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தி தலைமைத்துவம் குறித்து தீர்மானம் ஒன்றினை எட்ட முடியும். தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகிய மூவரில் யார் தலைவர் என்பதை இரகசிய வாக்கெடுப்பு மூலமாகவும் தீர்மானிக்க முடியும்.
அதுமட்டும் அல்ல கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் தோல்வியை சந்திக்க கட்சிக்குள் சிலரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போன்றவர்களுமே காரணமாகும். ஆகவே இனியும் கட்சியை நாம் பலவீனப்படுத்த தயாராக இல்லை. கட்சிக்குள் உள்ள முரண்பாடுகளை விரைவில் தீர்த்து தேர்தலுக்கு முகங்கொடுப்போம் என்றார்.
Post a Comment